துவாஸ் சோதனைச் சாவடியில் இந்த ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி அதிவேகமாக காரை மோதிய ஓட்டுநர் போதைப்பொருள் வழக்கில் சந்தேகிக்கப்படுபவர் என்றும் அவர் சட்டவிரோதமாக 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறியவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 47 வயது டியோ தியம் லெங், சம்பவ நாளில் மலேசியாவில் பயணிகள் இருவரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தார். அதிகாலை இரண்டு மணியளவில் மலேசியக் காவல்துறைக்குச் சொந்தமான காரைக் கண்டதும் அதிகாரிகள் தன்னைச் சோதிப்பர் என்று பயந்து காரை அதிவேகமாகச் செலுத்தினார்.
அதையடுத்து மலேசியக் காவல்துறையினர் அவரைத் துரத்தவே டியோவின் கார் துவாஸ் சோதனைச் சாவடியில் மோதி நின்றது (படம்).
அதில் பயணம் செய்த வியட்னாமியர் ஹோ தி நுங், சீன நாட்டவர் சென் சோங்சிங் இருவரும் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு சரக்கு வருகை வட்டாரத்திற்குள் ஓடினர்.
மூவரும் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். அனுமதியின்றி சரக்கு வளாகத்தில் நுழைந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சென், நுங் இருவருக்கும் நேற்று ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டியோ மீதான வழக்கு தொடர்கிறது.