போதைப் பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிராஸ் பசார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் நான்கு கிலோகிராமுக்கும் அதிகமான எடைகொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 177,000 வெள்ளி என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளில் 2.155 கிலோகிராம் எடைகொண்ட கஞ்சாவும் அடங்கும். அது, போதைப் பொருளுக்கு அடிமையான 307 பேருக்கு வழங்குவதற்குப் போதுமான அளவு என்று போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சுட்டியது.
500 கிராமுக்கும் அதிகமான போதைப் பொருளைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கைதான சந்தேக நபர், தான் இருந்த ஹோட்டல் அறையின் கதவைத் திறக்க மறுத்ததால் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைய வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அறையின் கழிவறையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கழிவறையில்தான் அவர் போதைப் பொருளை அப்புறப்படுத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அறையின் பல்வேறு பகுதிகளிலிருந்து போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.