பிள்ளைகள் அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றில் சேர்வதற்கான பதிவுக் காலம், அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்து உள்ளது.
கடந்த ஈராண்டுகளைப்போல இந்த ஆண்டும் இணையம் வழியாக பதிவு நடைபெறும் என்று அமைச்சின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இம்முறை, முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் இடம் கிடைக்கத் தகுதிபெறாத பிள்ளைகளுக்கு அடுத்த பதிவுக் கட்டத்தின்கீழ் இடம் கிடைக்கச் செய்ய, மேலும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் 40ஆக இரட்டிப்பாக்கப்படும் என்று அமைச்சு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
இந்த மாற்றங்களின் அடிப்படையில் பள்ளியுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத பிள்ளைகளுக்கு ஒவ்வொரு தொடக்கப்பள்ளியும் '2சி' பதிவுக் கட்டத்தின்கீழ் 40 இடங்களை ஒதுக்க வேண்டும்.
இந்த '2சி' பதிவுக் கட்டத்தின்கீழ், பள்ளிக்கு அருகில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.
இந்தக் கட்டத்தின்கீழ் 2014ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சு ஆண்டுக்கு 20 இடங்களை ஒதுக்கத் தொடங்கியதிலிருந்து போட்டி அதிகரித்துவிட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் சிங்கப்பூர் பிள்ளைகள், கடந்த ஆண்டு '2சி' கட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தபோது குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் மூன்றில் ஒரு பள்ளிக்குக் நிலை ஏற்பட்டது.
இதே பிரிவில் 2014ல் நான்கில் ஒரு பள்ளியில் குலுக்கல் நடந்தது.
இந்நிலையில் அமைச்சு இவ்வாண்டு 2'ஏ'(1), 2'ஏ'(2) இரண்டையும் சேர்க்கவுள்ளது.
இதன்படி, பெற்றோர் அல்லது சகோதரர்கள் படித்த பள்ளியில் பிள்ளைகளைப் பதிவு செய்யும் அதே கட்டத்தின்கீழ் முன்னாள் மாணவர் சங்கத்தில் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் இடம் ஒதுக்கப்படும்.
பெற்றோர்களுக்குக் கல்வி அமைச்சு முடிவுகளைக் குறுந்தகவல் வாயிலாகத் தெரிவிக்கும்.