முகமது ஏரோன் இர்வானுக்கு சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் நடமாட முடியும்.
நான்கு வயதில் அரியவகை தசை வலுவிழப்பு நோய்க்கு ஆளான இவர் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பில் இருந்தே செயற்கைச் சுவாசக் கருவியையும் பயன்படுத்துகிறார்.
உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று கவலைப்பட்ட இவருக்கு பள்ளி ஆசிரியர்களும் சக மாணவர்களும் அதை மகிழ்ச்சிகரமான ஒன்றாக ஆக்கியதாகக் கூறுகிறார் ஏரோன்.
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ஸெங்குவா உயர்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு சாதாரண நிலைத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற இவர், கல்வி அமைச்சின் வழக்கமான பள்ளிகளில் பயின்ற மிதமான சிறப்புத் தேவையுடைய 27,000 மாணவர்களில் ஒருவர்.
சக்கர நாற்காலியில் நடமாட்டத்தை எளிதாக்கும் புறச்சூழல்கள், உயரத்தை மாற்றியமைக்கூடிய மேசைகள் எனப் பள்ளி நிர்வாகம் பல வசதிகளைச் செய்துதந்தாலும் ஆசிரியர்களும் நண்பர்களும் தனக்கு மிகப் பெரிய ஊக்கமளித்ததாக ஏரோன் கூறுகிறார்.
இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஃபிடெல் வெங் 'ஆட்டிசம்' எனும் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்டவர்.
இவரது தாயார் தாதியாகவும் தந்தை கடலோரக் காவற்படையிலும் பணிபுரிகின்றனர்.
உணர்வுகளை வெளிப்படுத்தவும் சக மாணவர்களுடன் பழகவும் பள்ளியின் ஆசிரியர்கள் ஃபிடெலுக்கு வலுவான ஆதரவைத் தருவதுடன் வீட்டில் சிறுவனைக் கையாளும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் தருவதாக அவனது தாயார் குறிப்பிட்டார்.
நண்பர்கள் தன்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தருவது குறித்து ஃபிடெல் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆதரவு வழங்கும் திட்டங்களைக் கல்வி அமைச்சு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
சிறப்புத் தேவையுடையோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கை அளிப்பதிலும் சக மாணவர்களை ஈடுபடுத்துவது இதன் நோக்கம்.
பெற்றோரின் பங்கு
இவ்வேளையில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் பள்ளி வாழ்க்கை சிரமமின்றிச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பு முக்கியப் பங்கு வகிப்பதாக சார்புநிலைக் கல்வியாளர்களும் பள்ளி முதல்வர்களும் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் மட்டுமின்றி பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் தேவைகள் குறித்து பள்ளிக்குத் தெரியப்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ள அவர்கள் ஊக்குவித்தனர். ஆசிரியர்களின் வசதிக்கேற்ப குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் போன்றவற்றின் மூலம் அவர்கள் தொடர்புகொள்ளலாம்.
அதேநேரத்தில் பள்ளிகள் தங்கள் பிள்ளைகள் சிறப்பாகக் கற்றுக்கொள்வதில் பங்குவகிக்க விரும்புகின்றன என்ற நம்பிக்கை பெற்றோர்க்கு வேண்டும் என்கிறார் இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளியில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவின் தலைவர் திருவாட்டி கார்மெலியா டிரெஷியா அரியோலா.
பாடம் சார்ந்த, சாராத துறைகளில் தங்கள் பிள்ளைகளின் திறன்கள் குறித்தும் பெற்றோர் பள்ளியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஸெங்குவா உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் இங் ஹாக் சூன் பரிந்துரைத்தார்.
பார்வைத் திறன் குன்றிய தனது மகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவியாக இருந்தபோது ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்வதற்கான குறிப்பேடு இருந்ததையும் தான் அந்தப் பள்ளியில் தொண்டூழியம் செய்ததையும் நினைவுகூர்ந்த திருவாட்டி லீ சியூ சோ, பெற்றோர்-ஆசிரியர் தொடர்புக்கான சிறந்த வழிகள் இவை என்று குறிப்பிட்டார்.
சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு உதவும் வழிமுறைகள்