அடுத்த மாதம் முதல் சிங்கப்பூரில் கோழி இறைச்சியின் விலை பத்திலிருந்து 30 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். தமிழ் முரசிடம் பேசிய சில கடைக்காரர்கள் அவ்வாறு கூறினர்.
இதனால் தங்களின் கடைகளைத் தற்காலிகமாக மூட நேரிடலாம் என்றும் சிலர் குறிப்பிட்டனர்.
அடுத்த மாதம் முதல் மலேசியா கோழிகளை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இந்நிலை உருவாகியுள்ளது.
இதனால் தங்களின் வர்த்தகம் பெரிதும் பாதிப்படையும் என்று தேக்கா ஈரச்சந்தையில் கோழி இறைச்சி விற்கும் கடைக்காரர்கள் எங்களிடம் கூறினர்.
“என்னிடம் கோழி வாங்குபவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்பதால், விலை ஏற்றத்தினால் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டார்கள். முதலில் $6.50ஆக இருந்த கோழியின் விலை இப்போது $7க்கு உயர்ந்துள்ளது. எனது கோழிகள் அனைத்தும் மலேசியாவிலிருந்து இறக்குமதியாவதால் இனி விலை ஏறினால் நானும் விலையை மேலும் 50 காசு ஏற்றித்தான் ஆகவேண்டும். $7.50க்குக் குறைவான விலைக்குக் கோழியை விற்க முடியாது. அப்படி விற்றால் வியாபாரம் செய்யமுடியாது,” என்றார் 43 வயது க. ஜன்னத்.
அதிகரிக்கும் கோழியின் விலை நிச்சயம் கையைக் கடிக்கும் என்பதால், கோழி இறைச்சியை உண்ணுவதைக் குறைத்துக்கொள்ளபோவதாக சில வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டனர்.
“என் குடும்பத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது கோழி சமைப்போம். கடந்த இரண்டு மாதங்களில் கோழியின் விலை சுமார் 8 வெள்ளியிலிருந்து $12க்கு உயர்ந்துவிட்டது. மலேசியாவின் அறிவிப்பால் விலை மேலும் அதிகரிக்கலாம். இனி செலவுகளைக் கட்டுப்படுத்த வீட்டில் காய்கறிகளை சாப்பிடுவதை அதிகரித்து, கோழி சாப்பிடுவதைக் குறைக்கவேண்டிய நிலை ஏற்படலாம்,” என்றார் 40 வயது முகம்மது ஜுபைர்.
எனினும், விலை உயர்வு குறித்து தங்களுக்குக் கவலை இல்லை என்று எங்களிடம் பேசிய மற்ற சில வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மற்ற இறைச்சி வகைகளையோ வேறு நாடுகளிலிருந்து வரும் உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியையோ வாங்கப்போவதாக அவர்கள் கூறினர்.