ரகசியத்தன்மை காக்கும் மனநலச் சேவைத் திட்டம் ஒன்றை மனநலக் கழகம் இலவசமாகத் துவங்கப்பட்டது முதல், மேலும் அதிகமான இளையர்கள் உதவி நாடி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மனநல உதவி நாடுவதற்குப் பதிவான பரிந்துரைப்புகளும் அதிகரித்துள்ளதாக அறியப்படுகிறது. 'சமூக சுகாதார மதிப்பீட்டுக் குழு' அதாவது 'சேட்' திட்டத்தின்கீழ் கடந்தாண்டு 2,172 பரிந்துரைப்புகள் கிடைத்துள்ளன. 2016ஆம் ஆண்டில் பதிவான 908 பரிந்துரைப்புகளைக் காட்டிலும் இது இருமடங்காகும்.
இளையர்கள் பலருக்கும் 'சேட்' மூலம் முன்னோட்ட மனநலச் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து கூடுதல் உதவி தேவைப்பட்டால் அதற்கான பரிந்துரைப்பும் செய்யப்படுகிறது. நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ இணையம் வழியாகவோ இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இளையர்களிடையே மனநலப் பிரச்சினைகள் கூடியுள்ளதும் இந்த விவகாரம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும் திட்டத்தின்கீழ் உதவி நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று மனநலக் கழகத்தின் மருத்துவப் பிரிவுத் தலைவர் இணைப் பேராசிரியர் சுவப்ணா வர்மா கூறினார்.