தன் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் உயிர்பிழைக்கும் சாத்தியம் 30% மட்டுமே என்று மருத்துவர்கள் நிஷானிடம் கூறியிருந்தனர்.நிஷானின் கல்லீரலில் இருந்த கட்டி வெடித்து உடலெங்கும் பரவியது. அறுவை சிகிச்சைக்கு நிஷான் செல்வதற்கு முன்னர் உயிர்வாழும் வாய்ப்பு குறித்து மருத்துவர்கள் இவ்வாறு அவரைத் தயார்படுத்தினர்.
ஆனால் உடல்நலப் பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்கள் என அனைத்தையும் இன்று தாண்டி வந்துள்ளார் நிஷான்.
நிதி நிர்வாகம் தொடர்பில் உதவி தேடுவோருக்கும் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். சொத்து ஆலோசகராகப் பணிபுரியும் நிஷான் குருப், 29, தன் இலக்குகளை அடைவதற்குப் போதுமான ஆதரவின்றி ஒரு காலத்தில் தள்ளாடியவர்.
ஆஸ்திரேலியாவில் கணக்கியல், நிதித் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த நிஷான், ஒருநாள் உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென உடலில் அதிக வலியை உணர்ந்தார். நடக்க முடியாமல் நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்தார். அந்த நண்பருடன் மற்ற சில நண்பர்களும் உடனே நிஷானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சாதாரண வலி என நினைத்த மருத்துவர்கள், நிஷானை வீட்டுக்கு அனுப்ப இருந்த சமயத்தில் நிஷான் ரத்த வாந்தி எடுத்தார். அதன் பின்னரே நிஷானுக்கு 'கார்சினோமா' என்னும் புற்றுநோய் இருப்பது பரிசோதனை மூலம் உறுதியானது.
சிங்கப்பூர் திரும்பிய பிறகு குணமடைவதற்காக சில மாதங்கள் வீட்டிலேயே இருந்தார் நிஷான்.
சொந்தக் காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற வெறி அவருள் எழுந்தபோது, குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து வேறொரு வீட்டில் தனியே வசிக்கத் தொடங்கினார். வீட்டு வாடகை, மாதாந்திரக் கட்டணங்களைச் சமாளிக்க பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டார்.
பகுதிநேர வேலைகளில் ஈட்டிய பணத்தின் ஒரு பகுதியை பங்கு முதலீடு செய்தார். அதன் மூலம் பலனடைந்த நிஷான், முதலீடு செய்வது எப்படி என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்தார்.
இத்தாலிய வர்த்தக சபையில் வணிக மேம்பாட்டு நிர்வாகியாக முதல் முழுநேர பணியை மேற்கொண்ட நிஷான், அங்கு இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன் இத்தாலியர்களோடு இணைந்து சந்திப்புக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு பல நிறுவனங்களின் வரத்தகங்களை ஆராய்ந்தார். கெப்பல் நிறுவனத்திலும் அவர் நிதி நிர்வாகியாக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தபோது தினமும் வெவ்வெறு சவால்களைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொண்டார்.
அத்தியாவசியத் தேவைகளை மட்டும் நிறைவுசெய்வதால் சுகமாக வாழ்வது கடினம் என்று உணர்ந்த அவர், ஒவ்வொருவரும் தங்களது இலக்குகளை அடைவதற்கு நிதித் திட்டமிடுதலில் மும்முரமாக இறங்க வேண்டும் என்று கூறுகிறார்.
"ஆனால், இளையர்கள் இதுபோன்ற திட்டத்தின் முக்கியத்துவத்தை அறியாமல் அதைத் தள்ளிப்போடுகிறார்கள். அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்று தெரிவித்த நிஷான், தமது நிதி நிர்வாக அனுபவத்தைக் கொண்டு நிதித் திட்டங்களை ஆலோசனையாக வழங்கி வருகிறார்.