பரதக் கலையில் தேர்ந்த கல்பனா சிவன், சாதாரண அலுவலக வேலையில் இருக்க விரும்பவில்லை. சமூகவியல் துறையில் பட்டம்பெற்ற அவர், மக்களுடன் உரையாடி அவர்களது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென முடிவெடுத்தார்.
கல்பனாவின் தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கு தங்குவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் செலுத்திய கட்டணம் ஆயிரக்கணக்கானது.
மருத்துவக் காப்புறுதித் திட்டம் இல்லாததால், தன் தந்தை அவரது சேமிப்பிலிருந்து மருத்துவக் கட்டணத்தைக் கட்ட வேண்டியிருந்தது.
நிதித் திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை அந்தக் கசப்பான அனுபவம் வழியாக உணர்ந்தார் கல்பனா.
சமூகச் சேவைத் துறையில் ஆர்வம் இருந்தாலும் அத்துறையில் வேலை செய்யத் தனியொரு சமூகப் பணிப் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று உணர்ந்தார்.
எனவே, வேறு வழிகளில் மக்களுக்கு உதவலாமே என நினைத்தபோது காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மூலம் வாய்ப்பு அவர் கதவைத் தட்டியது.
நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவருடன் உரையாடியபோது இத்துறையில் சேர்ந்தால் மக்களின் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனக் கல்பனா நம்பினார்.
கல்பனாவின் சேவையை நாடிய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் அவரின் நண்பர்களும் உறவினர்களும் ஆவர். தங்களுடைய நிதித் திட்டங்களை கல்பனா முறையாகச் செய்வார் என்று நம்பி கல்பனாவை அவர்கள் அணுகினர்.
இவ்வாறு தன்னை நம்பி வருவோருக்குச் சிறந்த வகையில் நிதித் திட்டங்களை வகுக்க வேண்டும் எனத் தன் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளார் கல்பனா. நிதி ஆலோசகராக மட்டும் சிறந்து விளங்காமல் 2019ஆம் ஆண்டில் ‘தில்லானா’ என்னும் வசந்தம் ஒளிவழியின் நாடகத்திலும் நடனமணியாக, முன்னணி நடிகையாக நடித்தார்.
அதிக நாடக அனுபவம் இல்லையென்றாலும் தமக்கு விருப்பமான பரதநாட்டியக் கலை தொடர்பான திறமையை வெளிக்கொணரும் வகையில் அந்நாடகத்தின் கதாபாத்திரத்துக்கு கல்பனா உயிரூட்டினார்.
பல ஆண்டுகளாக பரதம் பயின்ற கல்பனா, தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார்.
சிங்கப்பூரை பிரதிநிதித்து வெளிநாடு களிலும் நடனம் ஆடி உள்ளார். பரதநாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புவோர், முன்பு பரதம் பயின்று மீண்டும் இப்போது பயிற்சி பெற விரும்புவோர் ஆகிய இரு தரப்பினருக்கும் மூன்று பரதநாட்டிய வகுப்புகளை ஆரம்பித்துள்ளார் கல்பனா.
தன் இரண்டு நண்பர்களின் உந்துதலால் 2020ஆம் ஆண்டில் உருவெடுத்த திட்டம் இது.
இவ்வாறு கலை வழியாகவும் தன் முழுநேரப் பணி மூலமாகவும் மற்றவர்களின் வாழ்க்கைக்கு மெருகூட்டி வருகிறார் இளையர் கல்பனா.