கி. ஜனார்த்தனன்
ஒரு காலத்தில் திரும்பத் திரும்பக் குற்றம் புரிந்துவந்த நரேஷ்குமார் ரவிச்சந்திரன், ஐந்தறிவு படைத்த உயிர்கள் மீது தான் கொண்ட அன்பால் திருந்தி இன்று புது மனிதனாக வாழ்கிறார். உடற்குறையுள்ளோருக்கான குதிரைச் சவாரி சங்கத்தில் குதிரைப்பாகனாக வேலை பார்க்கும் நரேஷ், 31, தற்போது சரியான வாழ்க்கைப் பாதையில் செல்வதைத் தான் உணர்வதாகப் பகிர்ந்துகொண்டார்.
குதிரைப் பிரியர்
மூன்றரை ஆண்டு காலமாக விலங்குகளுடன் பணியாற்றிவரும் நரேஷ், வாரத்தின் ஆறு நாள்களுக்கு உடற்குறையுள்ளோருக்கான குதிரைச் சவாரி சங்கத்திலும் வாரம் இருமுறை பகுதிநேரப் பராமரிப்பு அதிகாரியாக சிங்கப்பூர் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்திலும் பணியாற்றி வருகிறார்.
தற்போது அவரது பராமரிப்பின்கீழ் ஆறு குதிரைகள் உள்ளன.
"மென்மை, கம்பீரம் இரண்டுமே குதிரைகளிடம் உள்ளன. சிறு வயதில் பந்தயக் குதிரைகளை ரசித்த நான், விலங்குகளின் மீது அலாதி பிரியம் கொண்டேன்," என்று அவர் கூறினார். நரேஷ் தான் விரும்பும் துறையில் கடுமையாக உழைத்து தற்போது நற்பெயருடன் வாழ்ந்து வந்தாலும் அவரின் இளமைப்பருவம் கற்றுத்தந்த பாடத்தை இன்னும் மறவாமல் இருக்கிறார்.
இருண்ட காலம்
பெற்றோரின் மணமுறிவுக்குப்பின் தன் தாயாருடனும் தம்பி, தங்கையருடனும் வளர்ந்தார் நரேஷ் குமார். தீய நண்பர்களின் நட்பு கிடைத்ததை அடுத்து குண்டர் கும்பல் ஒன்றிலும் சேர்ந்தார்.
பதின்ம வயதில் குடிபோதையில் வீட்டுக்குத் திரும்பி அடாவடித்தனம் செய்து தன் தாயாரை அவமதித்தார். தனது 16வது வயதில் போதைப்பொருள் உட்கொள்ளத் தொடங்கிய நரேஷ், எந்த ஒரு வேலையிலும் நிரந்தரமாக இல்லாமல் சட்டவிரோதச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைத் தன் போதைப்பொருள் புழக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டார்.
நான்கு முறை சிறைவாசம்
நரேஷ் 2011, 2016, 2018 ஆண்டுகளில் மொத்தம் நான்கு முறை சிறைக்குச் சென்றார். அந்த காலகட்டத்தில் தான் மீண்டும் மீண்டும் தவறு செய்ய நேர்ந்ததை நினைவுகூர்ந்தார்.
"மற்றவர்கள் என்னைத் தாழ்வாக நடத்தியபோதெல்லாம் நான் மனமுடைந்து போனேன். எனக்கு வேலையும் சரிவர அமையாததால் அந்நேரத்தில் தீய நண்பர்கள் மீண்டும் என்னை நாடி வந்தபோது நான் மீண்டும் வழிதவறிச் செல்ல நேரிட்டது," என்று அவர் கூறினார்.
முதன்முதலாகத் தான் வேலை செய்யத் தொடங்கிய இடத்தில், பலர் தன்னை மதிக்காததுடன் எப்போதும் சந்தேகக் கண்ணோடு தன்னைப் பார்த்ததாகவும் நரேஷ் குறிப்பிட்டார். 2015ல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் கட்டட நிர்வாகத் துறையில் சான்றிதழ் பெற்ற நரேஷ், கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். ஆனால் 2016ல் மீண்டும் சிறை சென்றார்.
சிறைக்குப் பலமுறை சென்றபோதும் திருந்தியதற்கான உணர்வு தனக்கு ஏற்படவில்லை என்றார் நரேஷ். மற்ற கைதிகளுடன் சண்டைபோட்ட தருணங்களைக் குறிப்பிட்ட நரேஷ், தனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே அப்போது தான் எண்ணியதாகக் கூறினார்.
முன்னதாக காவல்துறையினரைக் கண்டாலே தான் நடுங்கியதா கக் கூறினார் நரேஷ்.
திருந்த வேண்டும் என்ற வெறி
இறுதியில் நரேஷ், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்ததை உணர்ந்தார்.
"நான் திருந்தி வாழ்வது பிறருக்காக அல்ல, எனக்காகத்தான் என்பதை உணர்ந்தபோது அந்த எண்ணமே எனக்குள் நிலைத்துவிட்டது," என்று அவர் கூறினார்.
இழிச்சொற்களால் ஆவேசமடைந்து உடனே பதிலடி கொடுக்கவேண்டும் என்பதற்காக மட்டும் தன்னை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதை உணர்ந்தார். அதற்குப் பதிலாக எத்தகைய மாற்றங்கள் தன் வாழ்வில் தேவை, எவை நீண்டகால நன்மைகளுக்கு வித்திடும் என்பதை நரேஷ் ஆராய்ந்தார்.
விலங்கு ஆர்வலராக இருந்த நண்பர் ஒருவரின் மூலம் தானும் ஒரு விலங்கு விரும்பி என்பதை நரேஷ் உணர்ந்து இறுதியில் அந்தக் குறிப்பிட்ட துறையில் வேலை செய்ய முடிவெடுத்தார்.
'மஞ்சள் நாடா' திட்டத்தின்கீழ் பல்வேறு வேலைவாய்ப்புகள் தன்னைத் தேடிவந்தபோதும் விலங்குகளுடன் வேலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் அது தொடர்பான வேலை விண்ணப்பங்களை அவர் அனுப்பினார்.
கைகொடுத்த சமுதாயம்
சிங்கப்பூர் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்திலும் தற்போதைய வேலை இடத்திலும் தான் பாகுபாடு ஏதுமின்றி நடத்தப்படுவது ஆறுதலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 'மஞ்சள் நாடா' திட்டத்தின் ஆதரவுடன் தற்போது விலங்கு மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் பட்டயப் படிப்பையும் நரேஷ் மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன், தொழிலியல் மற்றும் சேவைகள் கூட்டுறவுச் சங்கம் (ISCOS) மூலம் இலவசமாக வாகனமோட்டும் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.
சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் மூலம் இலவச மனநல ஆலோசனையும் பெற்றார் நரேஷ். இவ்வாறு தனது நலனுக்காகவும் பராமரிப்புக்காகவும் சமுதாயம் பெரும் பங்கு வகித்து வருவதாக நரேஷ் சுட்டினார்.
தன்னை 'அண்ணன், தம்பி' என்று கூறி அழைத்த நண்பர்கள், தான் சிறையில் இருந்தபோது வந்து பார்க்கவே இல்லை.
தான் தவறு செய்தபோதெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய குடும்பத்தார்தான் என்பதை நரேஷ் உணர்ந்தார்.
'இந்த நண்பர்களுக்காகவா என் வாழ்க்கையில் இத்தனை தியாகம் செய்தேன்?' என்ற எண்ணம் இவரை இந்நாள்வரை வருத்துகிறது.
குதிரைகளைப் பார்த்துக்கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் அதை விரும்பிச் செய்வதால் வேலை செய்கிறோம் என்ற அலுப்பும் சலிப்பும் தனக்கு ஏற்படவில்லை என்றார் நரேஷ்.
இளையர்களுக்கு அறிவுரை
தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத்தொழில் என்ன என்பதை இளையர்கள் நன்கு ஆராய வேண்டும். அதன் பின்னர் எடுக்கும் முடிவு, அவர்களின் வாழ்க்கையில் சாதகமான ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார் அவர்.
தீய பழக்கங்களுக்கு அடிமை யாகித் தற்காலிக இன்பங்களை நாடாமல் மனநல ஆலோசகர்களையும் வழிகாட்டக்கூடிய பெரியவர்களையும் அணுகுமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.
"வாழ்க்கை அழகானது. பலன் தராத எண்ணங்களால் அதைச் சிதைக்க வேண்டாம்," என முகத்தில் புன்னகை மலரக் கூறினார் இளையர் நரேஷ்.