மோனலிசா
பயிற்றுவிப்பாளர்கள் உதவியின்றி உடற்பயிற்சி செய்வதற்கான கைப்பேசிச் செயலி, பயிர்களில் என்ன குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறியும் கருவி ஆகிய படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோரை அங்கீகரிக்க, தொழில்நுட்பக் கல்விக் கழகம் அண்மையில் விருதுகள் வழங்கியது.
பயிற்றுவிப்பாளர் தேவைப்படாத நிலையில், ஏழு வயது முதல் 70 வயது வரையிலானோர் உடற்பயிற்சிகளை முறையாகச் செய்ய உதவுகிறது 'ஃபிட்சீ' (Fitsee) எனும் கைப்பேசிச் செயலி.
இதனை தொழில்நுட்பக் கல்விக் கழக (மத்திய கல்லூரி) மாணவர்களான ஆர்னெஷ் ராயன், 18, இஷா இலக்கி கனகசபை, 20, ஆகிய இருவரும் நால்வர் அடங்கிய தங்கள் குழுவினருடன் உருவாக்கி 'லீ குவான் இயூ தொழில்நுட்ப விருது' பெற்றனர்.
"கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல முடியாத சூழலில் சிலர் வீட்டில் இருந்தவாறே உடற்பயிற்சி செய்துவந்தனர். ஆனால் நாம் செய்வது சரியா என்று அறியாமலேயே அவர்கள் யூடியூப் காணொளிகள் மூலம் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
"இவ்வாறு சரியான கண்காணிப்பு இல்லாமல் உடற்பயிற்சிகள் செய்யப்படும்போது காயங்கள், தசை இழுப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அத்தகைய பாதிப்புகளைத் தடுக்கவே இயக்கவியல் தொழில்நுட்பம் (Kinematic Technology) என்ற ஒன்றைப் பயன்படுத்தி இந்தச் செயலியை உருவாக்கினோம்," என்று ஆர்னெஷ் ராயன் விளக்கினார்.
"இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்குக் கைப்பேசி இருந்தால் போதும். உடற்பயிற்சி செய்ய விரும்புபவர், தன் உருவம் முழுவதுமாக தெரியும் வகையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தன் கைப்பேசியைப் பொருத்திவிட்டு அதன் முன்னால் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தவறாகச் செய்யப்படும் உடற்பயிற்சியைச் செயலி சுட்டிக்காட்டிவிடும்," என்று இஷா இலக்கி கனகசபை கூறினார்.
செயலியைப் பயன்படுத்துபவரின் உணவு, ஊட்டச்சத்து தொடர்பாகக் கண்காணித்து அதற்குத் தகுந்தவாறு அறிவுரை வழங்கும் அம்சத்தையும் எதிர்காலத்தில் இந்தச் செயலியில் இணைத்து மேம்படுத்தத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் குழுவினர் கூறினர்.
'லீ குவான் இயூ தொழில்நுட்ப விருது' பெற்ற மற்றொரு குழு, பயிர்களின் குறைபாட்டைக் கண்டறியும் கருவி ஒன்றை உருவாக்கி இருந்தனர்.
குழுவில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழக (கிழக்கு கல்லூரி) மாணவரான 17 வயது பிரவின் நாகேந்திரன், கருவியின் நோக்கம் குறித்து விளக்கினார்.
"தொடர் ஆய்வுகளின் மூலம் பயிர்களின் குறைபாட்டை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால்தான், தகுந்த நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டு பயிர்களைக் காப்பாற்ற முடியும்," என்றார்.
கருவியைப் பயிர்கள் உள்ள இடத்தில் இட்டு அதைக் கைப்பேசி அல்லது 'டேப்லெட்' (Tablet) சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இயந்திரக் கற்றல் (machine learning) என்னும் செயற்கை நுண்ணறிவு நுணுக்கம் கொண்டு இந்தக் கருவி, பயிர்களின் நிலையை ஆராய்ந்து குறைபாடுகள் இருந்தால் அவற்றைத் தொடக்கத்திலேயே அடையாளங்கண்டு இணைக்கப்பட்ட சாதனங்களின் வழி தெரிவித்துவிடும்," என்று கூறினார்.
மொத்தம் 408 மாணவர்களைச் சிறப்பித்த இவ்விருது விழா, கடந்த மாதம் 26ஆம் தேதியன்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவர்களில் லீ குவான் இயூ விருதினை 'மாணவர்/பயிற்சியர்', 'இணைப்பாடம்', 'தொழில்நுட்பம்' ஆகிய பிரிவுகளின்கீழ் 49 பேர் பெற்றனர்.