பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் தலைநகர் கிகாலிக்கு பணிநிமித்தமாக செல்கிறார். பிரதமர் அலுவலகம் இதை நேற்று தெரிவித்தது.
இன்று தொடங்கி நாளை மறுதினம் வரை அங்கு நடைபெறும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் லீ கலந்துகொள்வார்.
பின்னர், அதிகாரத்துவ இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் அவர் கிகாலியில் இருப்பார். ருவாண்டா அதிபர் பால் ககாமேவை பிரதமர் லீ சந்திப்பார்.
பொதுவாக ஈராண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறும்.
ஆனால் இம்முறை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இச்சந்திப்பு நடைபெறுகிறது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக 2018ல் பிரிட்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிலும் பிரதமர் லீ கலந்துகொண்டார்.
பிற காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் லீ சந்திப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இம்முறை நடைபெறும் சந்திப்பில் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அரசாங்க அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 5,000க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் லீயுடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் ருவாண்டாவுக்குச் செல்கின்றனர்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகப் பிரதமராக இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.