வெள்ளிக்கிழமை ஜூலை 1 அன்று கொவிட்-19 தொடர்பான புதிய சில நடைமுறைகள் நடப்புக்கு வந்துள்ளன. இவற்றைப் பார்க்கலாம்.
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி
ஜுலை 1ஆம் தேதியிலிருந்து சில குறிப்பிட்ட நோய்கள் உள்ள நோய் அபாயம் அதிகம் இருக்கக்கூடியவர்கள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளைத் தெரிவித்து இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள், தடுப்பூசியைச் செலுத்தும் பலதுறை மருந்தகங்கள், பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் செல்லலாம்.
18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள நீரிழிவு நோய், இதயக் கோளாறு, ஆஸ்துமா, கல்லீரல் நோய், வாதநோய் உள்ளவர்கள், புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்டவர்கள் இதற்குத் தகுதி பெறுவார்கள்.
கட்டணக் கழிவுகள் இனி இருக்காது
பலதுறை மருந்தகங்கள், பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களில் சுவாச நோய்களுக்காக செலுத்தி வந்த 5 வெள்ளி அல்லது 10 வெள்ளிக் கட்டணம் இனி நடப்பில் இருக்காது.
அதாவது அங்கு தொற்றுப்பரவலுக்கு முன்பு இருந்த கட்டணங்கள் இனி மீண்டும் வசூலிக்கப்படும்.
ஆனால் வேறு திட்டங்களின் வழி சிங்கப்பூரர்கள் கட்டணக் கழிவைப் பெறக்கூடும்.
தொலைதூர மருத்துவ சிகிச்சை
தொலைதூர மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கான கட்டணக் கழிவு கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும்.
கொவிட்-19 கிருமி தொற்றி இலேசான அறிகுறிகளுடன் வீட்டில் இருந்தபடி குணமடைபவர்கள் தொலைதூர மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு இது பொருந்தும்.
ஆனால் அதிக நோய் அபாயம் உள்ளவர்கள், அல்லது மருத்துவமனையிலிருந்து வீட்டில் குணமடையும் கடும் நோய் அறிகுறி உள்ளவர்களின் தொலைதூர மருத்துவ சிகிச்சைக் கட்டணத்தை அரசாங்கம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும்.
அவசரசிகிச்சைப் பிரிவுக் கட்டணங்கள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதியில் இங்கு தங்கி இருப்பவர்களுக்கு கொவிட்-19 தொற்றி அவர்கள் அவசரசிகிச்சைப் பிரிவுக்குச் சென்றால் இதற்கு முன்னர் அரசாங்கம் அதற்கான கட்டணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது.
ஆனால் இனி மருத்துவமனையிலோ, சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட நிலையத்திலோ தங்கத் தேவை இல்லாதவர்கள் அவசரசிகிச்சைப் பிரிவுக் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும் மருத்துவமனையில் அல்லது சிகிச்சை நிலையத்தில் தங்க வேண்டியவர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை அரசாங்கம் தொடர்ந்து முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.