நியோ வெய் மெங், 41, என்பவரும் கோ சூட் ஹோங், 40, என்பவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும் 2018 நவம்பர் 11ஆம் தேதி இரவு நேரத்தில் நெயில் ரோட்டில் இருக்கும் 'ஈபார்' என்ற இரவு விடுதிக்குச் சென்று மதுபானம் அருந்தினார்கள்.
அடுத்த நாள் விடிகாலையில், கிராப் வாகனம் ஒன்றை நியோ அழைத்தார். அந்த வாகனத்தை 28 வயது ஆடவர் ஓட்டி வந்தார்.
அந்த வாகனத்தில் ஏறிச் சென்றபோது நியோவும் கோவும் வாகன ஓட்டியான ஆடவரை மானபங்கம் செய்தனர். முன்னதாக அவர்கள் தாங்கள் ஆண்கள் போல் வேடமிட்டு இருக்கும் பெண்கள் என்று அந்த வாகன ஓட்டுநரிடம் கூறினர்.
இந்த வழக்கில் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. கோவுக்கு ஓராண்டு சிறையும் இரண்டு பிரம்படிகளும் தண்டனையாகக் கிடைத்தன.
நியோவுக்கு 14 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட கிராப் வாகன ஓட்டுநரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று உத்தர விடப்பட்டு உள்ளது.
விசாரணையின்போது வாகன ஓட்டுநர் சாட்சியம் அளித்தார். "உனக்குச் சுகம் தர கடவுள் எங்களை அனுப்பி வைத்துள்ளார்," என்று அந்த இருவரும் டாக்கி ஓட்டுநரிடம் கூறிய தாகவும் தெரிவிக்கப்பட்டது.