மாதங்கி இளங்கோவன்
வருங்காலத்தில் ஆசிரியராக வேண்டும் என்ற இலக்கு கொண்டுள்ளார் பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பளத்தை நேற்று வென்ற கிரண் காசிநாதன், 19.
விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் பயின்ற கிரண், மேல்நிலை தேர்வில் 90 புள்ளிகளைப் பெற்றார். அவருக்கு புவியியல் பாடத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.
பொதுச் சேவைப் பிரிவின் உபகாரச் சம்பளத்தை நேற்று பெற்ற 66 மாணவர்களில் கிரணும் ஒருவர்.
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையைச் சிறு வயதிலிருந்தே பெற்றோரிடமிருந்து கற்ற கிரண், கல்விக்கு அப்பால் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
அவர் 'புக்ஸ் பியோண்ட் பார்டர்ஸ்' எனும் ஏற்கெனவே பயன் படுத்தப்பட்ட புத்தகங்களைச் சேகரித்து குறைந்த விலைக்கு விற்கும் அமைப்போடு இணைந்து பள்ளியில் புத்தகத் திரட்டு ஒன்றை நண்பர் களோடு நடத்தினார்.
இவர்கள் சுமார் 200 நூல்களை சேகரித்து 'புக்ஸ் பியோண்ட் பார்டர்ஸ்' சமூக நிறுவனத்திடம் தந்தனர். இந்த புத்தகங்களை மீண்டும் விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையை நேப்பாளத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு 'புக்ஸ் பியோண்ட் பார்டர்ஸ்' நன்கொடையாக அனுப்பியது,
தொடக்கக் கல்லூரியின் மாணவர் சங்கத்தில் சேர்ந்த கிரணுக்கு பல்வேறு பள்ளி நிகழ்ச்சிகளை திட்டமிடவும் மாணவர்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்யவாய்ப்பளிக்கப்பட்டது.
மாணவர் சங்கத்தை மேற்பார்வையிட்ட இவருடைய ஆசிரியர்கள் ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் மாணவர்களை வழிகாட்டாமல் தாமாகச் செயல்படவிட்டனர். தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
ஆசிரியர்கள் வழிகாட்டிய விதம் ஊக்கம் தந்ததால் தாமும் ஒரு சிறந்த ஆசிரியராக வேண்டும் என்று கிரண் தீர்மானித்தார்.
"மாணவர்கள் வெற்றியை நோக்கிச் செல்வது முக்கியம் என்றாலும் தோல்வியில் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க விரும்புகிறேன். தோல்வியைக் கண்டு துவண்டுபோகாமல் அதிலிருந்து மீண்டுவந்து கற்க வேண்டிய பாடங்களை வலியுறுத்தி, அவர்களின் உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்ளவும் இடங்கொடுப்பேன்," என்றார் கிரண்.
உயர்நிலைப்பள்ளி முதல் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் ஈடுபாட்டைக் காட்டிவருகிறார் கிரண்.
2019ஆம் ஆண்டில் 'எஸ்ஜி கிளைமெட் ரேலி' என்ற சுற்றுச் சூழல் கேடுகளுக்கான தீர்வுகளைப் பற்றி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கிரண் பங்கெடுத்தார். அங்கு இயற்கையை அன்போடு அரவணைக்கும் மற்றவர்களைக் கண்ட அவர், ஒவ்வொருவரும் பூமியைக் காக்க பங்களிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
தம் சமூக ஊடகப் பக்கங்களில் சுற்றுச்சூழலை பேணுவது எப்படி, நாம் அனைவரும் எவ்வாறு பங்காற்றலாம் என்பதைப் பற்றி கிரண் பதிவேற்றி வருகிறார். புவியியல் பாடம் படிக்கவுள்ள இவர், மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சிக்கலான உறவு பற்றி கற்க ஆவலுடன் உள்ளார்.