சிங்கப்பூரில் சூதாட்ட கட்டுப்பாட்டு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
கூடுதல் சூதாட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்படுவதால் சூதாட்டங்கள் தொடர்பாக தக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த ஆணையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சூதாட்டச் சேவைகள் இந்த ஆணையத்தின் மேற்பார்வையின்கீழ் கொண்டு வரப்படுகிறது.
சூதாட்டக் கூடங்களில் வழங்கப்படும் சூதாட்டச் சேவைகள், லாட்டரி, விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சூதாட்டம், இணைய விளையாட்டுகள் தொடர்பான சூதாட்டம் போன்றவை இதில் அடங்கும்.
விளையாட்டுக்கும் சூதாட்டத்துக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு மேலும் மேலும் தெளிவில்லாமல் போகும் நிலையில் ஆணையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சூதாட்டக்கூட கட்டுப்பாட்டு ஆணையத்துக்குப் பதிலாக இனி புதிய சூதாட்ட கட்டுப்பாட்டு ஆணையம் செயல்படும்.
மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா ஆகிய இரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட விடுதிகளைப் புதிய ஆணையம் மேற்பார்வையிடும்.
ஆணையத்தின் அறிமுக விழா நேற்று சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடை
பெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலைமையில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்பதால் சிங்கப்பூரில் சூதாட்ட கட்டுப்பாட்டுக்கு ஆணையத்தின் அறிமுகம் மிக முக்கியமான முதல் படி என்று கூறினார்.
எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் சுதாட்டத்தில் ஈடுபட தொழில்நுட்ப மேம்பாடும் வகை செய்திருப்பதை தொடர்பு, தகவல் அமைச்சருமான திருமதி டியோ சுட்டினார்.
இதன் விளைவாக இணையம் மூலம் சூதாட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றார் அவர்.
மர்மப் பரிசுப் பெட்டிகளுக்கான அதிகபட்ச வரம்பு $100ஐ தாண்டாது என்று ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சு முன்பு முன்வைத்த இந்தப் பரிந்துரை அடுத்த ஆண்டு நடப்புக்கு வரக்கூடும்.
இனி வரும் மாதங்களில் சூதாட்ட உரிமங்களுக்கு ஒப்புதல் தரும் செய்முறையை தடையற்றதாக்குவதில் ஆணையம் கவனம் செலுத்தும்.
இம்மாதம் அமல்படுத்தப்பட்ட சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் 'மாஜோங்' போன்ற சூதாட்ட விளையாட்டுகளை ஏற்பாடு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்கள் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்.
சூதாட்டக்கூட கட்டுப்பாட்டு சட்டம் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் டியோ தெரிவித்தார்.
இதுகுறித்த மேல்விவரங்கள் தயாரானதும் அவற்றை உள்துறை அமைச்சு பகிர்ந்துகொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.