பொன்மணி உதயகுமார்
அதிகம் பேசப்படாத ஆனால் தேசத்தின் அன்றாட இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் ஊழியர்களை அங்கீகரிப்பதற்காக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அறிமுகப்படுத்திய #செர்விங்எஸ்ஜி எனும் திட்டத்தின் நான்காம் அங்கத்தில் ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஒருவர் திருவாட்டி சங்கரி. கொவிட்-19 பெருந்தொற்று நோய் முறியடிப்பு நடவடிக்கையின்போது 6 வயது பாலர் பள்ளி மாணவன் பள்ளிக்குச் செல்ல முடியாததாலும் தன் நண்பர்களைக் காணமுடியாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உலகமே இருண்டது போல் இயங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். அவரை இந்நிலையிலிருந்து மீட்பதற்குப் பெற்றோர் அவரது ஆசிரியரான 31 வயது திருவாட்டி சங்கரியின் உதவியை நாடியிருக்கிறார்கள். கால் எலும்பு முறிவினால் ஓய்வில் இருந்த சங்கரி, காணொளி தொடர்பு மூலம் மாணவனிடம் அன்றாடம் பேசி ஆறுதல் கூறியிருக்கிறார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக என்ன பாதிப்பை எதிர்நோக்கினார்கள் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கேட்டபோது இந்நிகழ்வை சங்கரி அவரிடம் பகிர்ந்துகொண்டார். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும் என விரும்பும் சங்கரி, நெருக்கடிநிலையின்போது பிள்ளைகளைக் கைவிட்டுவிடக்கூடாது எனும் கடமையுணர்வாலும் அவர்கள் மீது கொண்ட அக்கறை
யாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என எண்ணி தன் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பாடங்களை நடத்த தொடர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார்.
இஸ்தானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றோர் ஆசிரியரான 32 வயது திருவாட்டி ஷரோல் நித்யா எஸ். எம். தனபதி, 13 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்ததற்கு மற்ற துறைகளைப் போல் இல்லாமல், பல்வேறு பணிகளைப் புரியும் பன்முகத்தன்மையை ஆசிரியர் பணி கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிள்ளைகளுக்குத் தான் பாடங்கள் கற்பிப்பது ஒருபுறம் இருக்க, தானும் பிள்ளைகளிடத்தில் பலவற்றைக்
கற்றுக்கொள்ள முடிகிறது என்றும்
பகிர்ந்துகொண்டார்.
கொவிட்-19 தொற்றுக்குப் பின்பு பள்ளி திரும்பிய பிள்ளைகள் முகக்கவசம் அணிந்திருக்கும் தங்கள் ஆசிரியர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனதாக அவர் கூறினார்.
இம்மாதிரியான சவால்களை நெருக்கடிநிலைக்குப் பின்பும் ஆசிரியர்கள் எதிர்நோக்கியதை விவரித்த அவர், எதிர்காலத்தில் கூடுதல் தேவைகள் இருக்கும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மேலும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். அதோடு, இன்னும் பலர் குழந்தைப் பருவ ஆசிரியர்கள் ஆக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதிபரின் பாராட்டுகளைப் பெற்ற 32 ஆசிரியர்களில் ஒருவரான 28 வயது திருவாட்டி தஷ்கா அன் ஷாலினி ஹாட்ஜ் தற்போது தற்காலிகத் தலைமையாசிரியராக இருக்கிறார். கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது பாலர்கள் வீட்டில் அடைந்து கிடந்த நிலையில், தன் வகுப்பில் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் கவலைப்பட்ட மாணவனின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துவிட கூடாதென்பதால் அவரை உற்சாகப்படுத்த, காணொளி தொடர்பு மூலம் வகுப்புடன் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாட தஷ்கா ஏற்பாடு செய்தார். ஆசிரியராகத் தொடங்கி ஏழு ஆண்டுகளில் தலைமை பொறுப்புக்கு முன்னேறி இருக்கும் இவர் தலைமைத்துவம் என்பது அதிகாரத்துவம் அல்ல, அது மற்றவர்களுக்கு தாம் அளிக்கும் சேவையைக் குறிக்கிறது என நம்புகிறார். ஆசிரியர்கள் மத்தியில் பிள்ளைகளின் மேம்பாட்டுக்கான குறிக்கோள் இருக்க வேண்டும் என்றும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் கருத்துரைத்தார்.