சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படையும் வேளையில் மேலும் அதிகமானோருக்கு ஞாபக மறதி நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் அத்தகையோருக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட கூடுதல் வர்த்தகங்கள் முன்வரலாம் என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார்.
டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்புக்கு கெப்பல் நிறுவனத்தின் நன்கொடைப் பிரிவு $1 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்தச் சமூக சேவை அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க இந்தத் தொகை உதவும்.
கெப்பல் நிறுவனம் வழங்கும் $1 மில்லியன் நன்கொடையிலிருந்து $600,000, டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்பின் புதிய நான்கு நியூ ஹொரைசன் நிலையங்களுக்குச் செல்லும் ஞாபக மறதி நோயாளிகளின் கட்டணத்தைக் குறைக்க உதவும்.
நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு தோ பாயோ வட்டாரத்தில் டிமென்ஷியா சிங்கப்பூர் அமைப்புக்குச் சொந்தமான நியூ ஹொரைசன் நிலையத்துக்கு அதிபர் ஹலிமா நேற்று சென்றிருந்தார். தமது தாயாரின் இறுதிக் காலத்தில் அவருக்கு ஞாபக மறதி நோய் இருந்ததாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.