குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகள், மூத்தோருக்கு லிட்டில் இந்தியாவைச் சுற்றிக்காட்டும் ஊர்வலம் என தீபாவளியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளை நடத்தியது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா). மூத்தோரை ஈடுபடுத்தும் முயற்சியாக ‘டவுன் மெமரி லேன்’ நிகழ்வு நடந்தேறியது. தனிமையில் வாழும் மூத்தோரை சிண்டாவின் இளம் தொண்டூழியர்கள் லிட்டில் இந்தியாவுக்கு மூன்று சக்கர மிதிவண்டியில் அழைத்துச் சென்றனர்.
இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில் இளம் தொண்டூழியர்களுக்கும் மூத்தோருக்கும் இடையே கலந்துரையாடல் அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மூத்தோருக்குச் சிறப்பு தென்னிந்திய உணவும் வழங்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு குறைந்த வருமானம் ஈட்டும் 1,200 குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளும் மளிகைப் பொருள்களும் $120 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகளும் சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டன. இம்மாதம் 1ஆம் தேதியன்று கிராப் நிறுவனத்தைச் சேர்ந்த 50 கிராப் ஓட்டுநர்கள், மொத்தம் 600 அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்தனர்.
லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் நிதி திரட்டுவதற்கான மையம் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் தீபாவளிக்கு முதல் நாளான இம்மாதம் 23ஆம் தேதி வரை செயல்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக 22 ஆண்டுகளாக நடத்தப்படும் இத்திட்ட நன்கொடையாளர்கள், பங்குதாரர்கள், தொண்டூழியர்கள் முதலியோருக்கு நன்றிகூறும் வண்ணம் இம்மாதம் 8ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் கலந்துகொண்ட சிண்டாவின் தலைவர் திருவாட்டி இந்திராணி ராஜா, நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டியதோடு ஒன்றுபட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற சமூக நடவடிக்கைகளின் பங்கு முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு ‘புரோஜெக்ட் கிவ்’ நிதி திரட்டு திட்டத்தில் இவ்வாண்டு அதிகமான இளையர்கள் உற்சாகத்துடன் முன்வந்து உதவியது வரவேற்கத்தக்கது என்று சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.