மாதங்கி இளங்கோவன்
பெரியோருக்கான கற்றல் கழகம் (Institute of Adult Learning) பயிற்சியளிப்பதற்கு மட்டுமல்லாமல் இனி பெரியவர்களின் உன்னதக் கற்றலுக்கென ஒரு தேசிய நிலையமாகவும் (National Centre of Excellence for Adult Learning) செயல்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்துள்ளார். சிங்கப்பூரர்கள் போட்டித்தன்மையுடனும் காலத்துக்கேற்ற திறன்களுடனும் விளங்க, தொடர்ந்து அவர்களுக்குப் புதுத் திறன்களைக் கற்றுத்தருவதோடு பயிற்சியளிப்பது மிக முக்கியம்.
அப்போதுதான், சிங்கப்பூரர்களால் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணியின்வழி சமுதாயத்திற்குத் தரமாகப் பங்களிக்க முடியும் என்றார். புதுத் திறன்களை உள்வாங்கி வேலையில் இறங்கும்போது போதுமான வருமானம் ஈட்டி, தங்களையும் தங்களுடைய குடும்பத்தாரையும் பராமரித்து, குறிக்கோளோடு வேலை செய்கிறோம் என்ற உணர்வையும் அடைய வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.
இரண்டு நாள் நடக்கும் உல களாவிய வாழ்நாள் கற்றலுக்கான உச்சநிலை மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார் அமைச்சர் சான்.
பெரியவர்களின் உன்னதக் கற்றலுக்குத் தேசிய நிலையத்தை உருவாக்குவது உட்பட சிங்கப்பூரின் வாழ்நாள் கற்றல் திட்டத்தை மேம்படுத்துவதற்கான சிங்கப்பூரின் ஆறு முனை அணுகுமுறையை அமைச்சர் சான் விளக்கினார்.
முதலாவதாக, சிங்கப்பூரர்கள் தங்களின் திறன்களைப் புரிந்துகொள்ளவும் மேலும் என்னென்ன திறன்கள் தேவை என்பதை அடையாளம் காணவும் இந்த அணுகுமுறையின் கீழ் உதவி பெறுவர்.
அடுத்து, புதுத் திறன்களுக்கான தேவையை மேலும் சிறப்பாக வெளிப்படுத்தவும் மதிப்பிடவும் நமது கட்டமைப்பை மாற்றியமைத்து வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களைப் புரிந்துகொள்ளவும் விரைவாகத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
பெரியவர்களுக்கான கற்றல் அணுகுமுறைகள் தொடர்பில் ஆய்வுகளை ஆழமாக்குவதை நான்காவது அம்சமாக அவர் குறிப்பிட்டார்.
ஐந்தாவதாக, திறன் மேம்பாட்டிலும் புதுத் திறன் பயிற்சியிலும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பவர்கள் ஈடுபட வேண்டும்.
இறுதியாக, தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையே உள்ள இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என்றார் அமைச்சர் சான்.
கடந்த காலக் கற்றலின் அடிப்படையில் எதிர்காலச் சவால்களைச் சந்திக்க முடியாது என்றார் அவர்.
"தற்போதைய நிலையைக் காட்டிலும், ஊழியர்களுக்குச் சரியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அவர்களால் சமூகத்தில் முன்னேற முடியும். சமூக இணக்கத்திற்கும் இது வழிவகுக்கும்," என்றார் அமைச்சர்.