ஆசிரியர்கள், வாழ்நாள் முழுவதிலும் கற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தினார்.
அறிவைப் போதிக்கும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தெரிந்துவைத்திருக்கவேண்டும். வகுப்பறைக்கு வெளியே பெற்றோர், தொழில்துறையினர் போன்ற பங்காளிகளுடன் சேர்ந்து செயல்படக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இந்தத் தேர்ச்சிகள் எல்லாம் ஆசிரியர்கள் வேலையைத் தொடங்கும்போது கற்பிக்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் பணிக்காலம் முழுவதும் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டு வரவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதாவது, ஆசிரியர்கள் தாங்களே வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று திரு சான் குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஆசிரியர்களுக்குத் தலைசிறந்த தொழில்நுட்ப ஆதரவு இருக்கும் என்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கல்வித்துறையின் தேவைகள் மாறிவருகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் பயிற்சி ஆசிரியர்களைத் தேசிய கல்விக் கழகம் எப்படி உருவாக்கி வருகிறது என்று ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி டெனிஸ் புவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அளித்த பதிலில் அமைச்சர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அறிவு, கல்வி ஆகியவற்றின் தன்மை மாறிவருகிறது. இதன் காரணமாக ஆசிரியர்களுக்குத் தேவைப்படக்கூடிய தேர்ச்சிகளும் மாறி வருகின்றன.
"அறிவு மட்டும் போதாது. அந்த அறிவைப் பயன்படுத்தி வலுவான நன்னெறிகள் அடிப்படையில் தெள்ளத்தெளிவான நல்ல முடிவுகளை எடுக்க வேண்டியது அதைவிட முக்கியமானது.
"ஆகையால், நம்முடைய ஆசிரியர்களின் தேர்ச்சிகள் தொடர்ந்து பரிணமித்து வரவேண்டும்," என்று அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
அதிகத் திறன் வாய்ந்த மாணவர்கள் தங்களுடைய முழு ஆற்றல் அளவுக்கு மேம்படுவதற்குக் கல்வி போதனையாளர்கள் உதவ வேண்டும்.
சிறப்புத் தேவை உள்ளவர்களையும் அவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். இவற்றைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு உதவ முடியும் என்று அமைச்சர் கூறினார்.
தேர்ச்சிகள் மாற்றமடையும், பரிணமிக்கும் என்றாலும்கூட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முறை போன்ற சில அடிப்படைகள் மாறமாட்டா என்று திரு சான் குறிப்பிட்டார்.
தேசிய கல்விக் கழகம் கல்வி அமைச்சுடன் சேர்ந்து அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
மாணவர்களிடம் நல்ல குணநலன்களைப் பலப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அதன் பாடத்திட்டம் ஒருமித்தகவனம் செலுத்துகிறது என்றும் திரு சான் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் எண்ணிக்கையை மட்டுமின்றி அவர்களின் தரத்தையும் உன்னத நிலைக்கு உயர்த்துவதில் அமைச்சு ஒருமித்தகவனம் செலுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.
ஆசிரியர்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவு இருக்கிறது என்பதையும் கல்வி அமைச்சு உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.