மோனலிசா
ஒரு சமூகத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதில் கலைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன என்று குறிப்பிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ட்ரொட்ஸ்கி மருது, அதில் கலைகள் எவ்வளவு கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கினார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைஞர்களுடைய படைப்புகள் மனிதனின் வாழ்வியல் முறைகள் தொடங்கி பல்வேறு தகவல்களையும் குறிப்புகளையும் மறைமுகமாக உள்ளடக்கும் வரலாற்றுச் சான்றுகளாகவே அமைகின்றன என்பதையும் நினைவூட்டினார்.
இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுடன் கலைஞர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரைகலை வரலாற்றில் தமிழ் அடையாளத்தின் பரிணாம வளர்ச்சியை மையப்படுத்திய விரிவுரை, கலந்துரையாடல் நிகழ்வு சென்ற வாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழில் வரைகலையின் தோற்றம் பற்றியும் தன்னை அதிகம் ஈர்த்த தமிழ் இலக்கியக் கூறுகளை வரைகலை ஓவியங்களாக உருவாக்கிய விதங்கள் குறித்தும் விரிவாக ஓவியர் மருது பேசினார்.
சங்ககாலத் தமிழர்களின் கற்பனையை திரைப்படங்கள் எவ்வாறு வடிவமைத்துள்ளன என்பன பற்றியும் திரைப்படங்களுக்காக புராணக் கதாபாத்திரங்களை மறுவடிவமைக்கும் தேவைகுறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மின்னிலக்க ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான ஓவியர் மருது பல திரைப்படங்களுக்கு கலை இயக்குநராகவும், 'விஎஃப்எக்ஸ்' இயக்குநராகவும் (VFX Creative Director) பணியாற்றியுள்ளார்.
இவரது ஓவியங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இவரின் மறக்கமுடியாத பணி, அனுபவங்கள் பற்றிய சுவாரசிய கேள்வி-பதில் அங்கமும் நடைபெற்றது.
கலைஞனின் கற்பனையை பார்வையாளர்களுக்கு எளிமையாக விளக்கும் விதத்தில் ஓவியங்களை உருவாக்கும் பல நுணுக்கங்களை இந்த கலந்துரையாடல் வழி அறிந்துகொண்டதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட உயிரோவியக் கலைஞர் ஜெகன்னாத் ராமானுஜம் கூறினார்.