மோனலிசா
கற்றல் கற்பித்தல் அனுபவங்களை சிங்கப்பூர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேம்படுத்தும் நோக்கில் 'மாணவர் கற்றல் மின்தளம்' எனும் இணையவழிக் கற்றல் தளத்தை கல்வி அமைச்சு 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கொவிட்-19 காலகட்டத்தில் வீட்டிலிருந்து மாணவர்கள் பாடம் படிக்க வேண்டிய சூழலில் இக்கற்றல் கற்பித்தல் முறை அதிகளவு பயன்பாட்டைக் கண்டது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மின்னிலக்கமயமாதலை ஆதரிக்கும் வகையில் கல்வி அமைச்சு இதுவரை 10,000க்கும் மேற்பட்ட கற்றல் வளங்களை தொடக்கநிலை முதல் புகுமுகநிலை வரை உருவாக்கியுள்ளது.
இதன் ஓர் அங்கமாக 2021ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையிலிருந்து 'கலவைமுறைக் கற்றல்' (Blended Learning), பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கற்றல் முறையில் மாணவர்களுக்கு வகுப்பறைக் கற்றல் சூழலும் இணையவழிக் கற்றல் அனுபவமும் ஒருசேர வழங்கப்படுகிறது.
இக்கற்றல் முறை மூலம் ஒவ்வொரு மாணவராலும் தத்தம் சொந்தக் கல்வி நிலை, வேகம், புரிதல் மற்றும் மனதில் வாங்கும் திறனுக்கேற்பப் பாடங்களைக் கற்க முடிகிறது. இத்தளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றும் கற்றல் வளங்களை மாணவர்கள் எந்நேரமும் எங்கேயும் இருந்தவாறு பயன்பெற முடிகிறது.
கூடுதலாக இத்தளத்தில் 'கேமிஃபிகேஷன்', 'டெக்ஸ்ட்-டு-ஸ்பீச்', செயற்கை நுண்ணறிவு மூலம் வாசிப்பு மதிப்பீடு போன்ற மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் சிறப்புக் கற்றல் அம்சங்களும் உள்ளன. மேலும், ஒவ்வொரு மாணவர் பதிவேற்றம் செய்யும் வீட்டுப்பாடங்களையும் பயிற்சிகளையும் ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனத்துடன் திருத்தவும் கருத்து தெரிவிக்கவும் இத்தளம் உதவுகிறது.
இக்கற்றல் தளம் குறித்த தம் அனுபவத்தை தெமாசெக் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை முனைவர் ஜாஸ்லின் பிரிசில்டா, 47, பகிர்கையில், "இத்தளம் மூலம் எங்களால் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் தேவைகளை நிறைவு செய்ய முடிகிறது. கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், பேச்சுவழி கருத்துப் பறிமாற்றம், எழுத்துவழி கருத்துப் பறிமாற்றம் ஆகிய ஆறு திறன்களிலும் மாணவர்கள் தேர்ச்சிபெற பாடங்களைத் திட்டமிட முடிகிறது," என்றார்.
ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் புத்தாக்க முறையிலும் மாணவர்களுக்குச் சுவாரசிய வகையிலும் கற்றல் வளங்களை உருவாக்க இத்தளம் உதவுகிறது என்றும் ஜாஸ்லின் குறிப்பிட்டார். இப்பாடங்களை ஆசிரியர்கள் கற்றல் சமூகத் தொடர்பு வட்டம் மூலம் பிற ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளதென்றும் அவர் கூறினார்.
மேலும், இக்கற்றல்முறை மாணவர்களின் முழு பங்கேற்பைத் தூண்டுவதோடு சுயகற்றலை ஊக்குவித்து, கற்றலை மகிழ்ச்சியுடையதாகவும் சுவாரசியமானதாகவும் மாற்றுகிறது என்றும் தெரிவித்தார். தெளிவாக வரையறுக்கப்பட்ட பாடங்கள், ஊடகவழி விளக்கப்படுவதால் கற்றல் எளிமையாகிறது என்றும் கூறினார் முனைவர் ஜாஸ்லின்.