இன அடிப்படையிலான ஒதுக்கீட்டு வரம்பினால் தங்கள் வீடுகளை விற்க இயலாத நான்கு பேரிடமிருந்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) சென்ற ஆண்டு வீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இன ஒருங்கிணைப்புக் கொள்கை தொடர்பில் சென்ற ஆண்டு 411 மேல்முறையீட்டு விண்ணப்பங்களைக் கழகம் பெற்றதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். இவற்றில் 131 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதர 127 விண்ணப்பங்களுக்கு மாற்றுத் தீர்வுகள் வழங்கப்பட்டன. இன அடிப்படையிலான ஒதுக்கீட்டு வரம்பை அகற்றுவதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை விற்பதற்குக் கூடுதல் அவகாசம் வழங்குவது அந்தத் தீர்வுகளில் அடங்கும்.
மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் 280 நிராகரிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள், வீட்டு உரிமையாளர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவர்கள் வீடு வாங்கிக் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். வெளிச் சந்தையில் ஆறுமாத காலம் தொடர்ச்சியாக வீட்டை விற்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் லீ இந்த விவரங்களை வெளியிட்டார்.
மேல்முறையீட்டு விண்ணப்பம் செய்தோரில் 14 விழுக்காட்டினர் சீனர்கள்; 25 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்; எஞ்சிய 61 விழுக்காட்டினர் இந்தியர்கள் அல்லது இதர இனத்தவர் என்றார் அவர்.
1989ஆம் ஆண்டு இன ஒதுக்கீட்டு வரம்பு அமலுக்கு வந்தது. ஒவ்வொரு வீவக புளோக்கிலும் அந்தந்த இனத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவிலேயே வீடுகளை வாங்கவோ மறுவிற்பனை செய்யவோ இயலும்.
அண்மை ஆண்டுகளில் மூன்றில் ஒரு வீவக புளோக்கில் இந்த வரம்பு எட்டப்பட்டுவிட்டதால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
இவர்களுக்கு உதவும் நோக்கில் கழகம் இத்தகைய வீடுகளைத் திரும்ப வாங்கிக்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உரிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீட்டு உரிமையாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் வெளிச் சந்தையில் ஆறு மாத காலம் தங்கள் வீட்டை விற்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் அவசியம். அதன் அடிப்படையில், கழகம் அவர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரக்கூடும்.
அல்லது குறிப்பிட்ட இனத்தவரிடம் மட்டுமே விற்கலாம் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கக்கூடும் என்று அமைச்சர் லீ தெரிவித்தார். இவ்வாறு செய்வதால் அந்த புளோக்கில் இன அடிப்படையிலான சம நிலை பாதிக்கப்படுமேயானால், கழகம் அந்த வீட்டை வாங்கிக்கொள்ளும் என்றார் அவர்.