பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு ஏற்பட்ட பாலியல் தாக்குதலின் விவரத்தை, அவரது விருப்பத்திற்குப் புறம்பாக வெளியிட்டதாகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கூறியுள்ளனர்.
திருவாட்டி ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியதைத் தொடர்ந்து 2021ல் கட்சியிலிருந்து விலகினார். தனக்கு நேர்ந்ததை “R” என்ற எழுத்தில் தொடங்கும் நான்கெழுத்து ஆங்கிலச் சொல்லால் குறிப்பிட வேண்டாமென்று கட்சித் தலைவர்களிடம் அவர் பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், “பாலியல் தாக்குதல்” என்று பொதுவாகக் குறிப்பிடுவதையே தான் விரும்புவதாகத் தொடர்ந்து சொன்னதாகவும் திருவாட்டி லோ பெய்யிங்கும் திரு யுதிஷ்ட்ரா நாதனும் புதன்கிழமை கூறினர்.
“அவர் தனது தனியுரிமையை மதிக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டும், அவரது சம்மதமின்றி, அவருக்கு நேர்ந்ததை பிரித்தம் சிங் பகிரங்கமாக வெளியிட்டார்,” என்று இருவரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
திருவாட்டி கான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தைப் பாட்டாளிக் கட்சி உணர்வுபூர்வமாகக் கையாண்டதா என்பது பற்றி திரு சிங்குக்கும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகத்திற்கும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து இருவரும் இந்த விவரத்தை வெளியிட்டனர்.
திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியதை ஒப்புக்கொண்டபோது, தான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதைத் தெரிவித்தார்.
“பிரித்தம் சிங் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைகளைப் பார்த்து நாங்கள் வருத்தமடைந்தோம்…அது முற்றிலும் உணர்வுபூர்வமற்றதாக எங்களுக்குத் தோன்றியது. இந்த அவமதிப்பை நாடாளுமன்றத்தில் மீண்டும் பார்த்ததில் திடுக்கிட்டுப்போனோம்” என்று திருவாட்டி லோவும் திரு நாதனும் தங்கள் அறிக்கையில் கூறியிருந்தனர்.