பாலியல் தாக்குதல் சம்பவம் ஒன்றை போலிஸ் தவறாகக் கையாண்டதாக பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் கூறியதன் தொடர்பில் அவர் மேல் விவரங்களைத் தெரிவிக்கவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாதர்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில் விவாதம் நடந்தது. அதில் திருவாட்டி கான் கலந்துகொண்டார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயது பெண்ணுடன் மூன்றாண்டுகளுக்கு முன் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக தானும் சென்றதாக திருவாட்டி கான் குறிப்பிட்டு இருந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை விசாரித்த போலிஸ் அதிகாரி, அந்தப் பெண் அணிந்திருந்த உடை பற்றி பொருத்தமில்லாத வார்த்தைகளை உபயோகித்ததாகவும் அந்தப் பெண் குடித்து இருந்ததாக அவர் கூறியதாகவும் திருவாட்டி கான் தெரிவித்து இருந்தார்.
அதையடுத்து போலிசார் தங்களுடைய புகார் பதிவுகளைப் பரிசோதித்துப் பார்த்ததாகவும் திருவாட்டி கான் தெரிவித்ததைப் போன்று ஒரு புகாரை அதிகாரிகள் பார்க்கவில்லை என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
அந்தச் சம்பவம் பற்றி பல்வேறு விவரங்களையும் தெரிவிக்கும்படி திருவாட்டி கானை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
போலிஸ் தொடர்பில் தெரிவிக்கப்படும் இத்தகைய புகார்களை அரசாங்கம் மிகக் கடுமையாக கருதுகிறது என்றும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் அதிகாரிகளை அடையாளம் காண்பதும் அவர்கள் தரப்பின் கருத்துகளைக் கேட்டு உண்மை நிலவரங்களின் பேரில் மேல் நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் யார் என்பதைத் தெரியப்படுத்தக்கூடிய எந்த விவரத்தையோ அல்லது பெயரையோ தெரிவிக்கும்படி திருவாட்டி கான் கேட்டுக்கொள்ளப்படமாட்டார் என்று நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின் உறுதி அளித்தார்.
இதற்குப் பதிலளித்த திருவாட்டி கான், தான் கூறியது உண்மை என்றார். இருந்தாலும் மேல் விவரம் எதையும் தெரிவிக்க திரும்பத் திரும்ப அவர் மறுத்துவிட்டார்.
இந்த விவகாரத்தை இப்போதைக்கு தான் விட்டுவிடப்போவதாக தெரிவித்த அமைச்சர், இதுபற்றி போலிஸ் தொடர்ந்து புலன்விசாரணை நடத்தும் என்றும் கூறினார்.
"போலிசில் இதற்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் திருவாட்டி கானை நேர்காணல் செய்வார்கள்.
"குறிப்பிட்ட அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் எந்தப் புகாரும் மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் போலிஸ் படையின் உள்விவகார அலுவலகத்திடம் தெரியப்படுத்தப்படும்," என்றும் அமைச்சர் கா சண்முகம் கூறினார்.