எதைச் செய்தாலும் அதைத் திறம்பட செய்யவேண்டும் என்ற கட்டுக்கோப்புடன் இயங்குபவர் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி ஸ்வேதா நாகேந்திரன், 16.
இணைப்பாட நடவடிக்கைக்காக தேசிய மாணவர் காவற்படையில் சேர்ந்து நிலைய ஆய்வாளராக உயர்ந்த ஸ்வேதா, தன்னையும் சக மாணவர்களையும் கட்டுக்கோப்புடன் வழிநடத்தினார்.
மேலும், தொண்டூழியம் மூலம் பிறரின் குறைகளைப் புரிந்துகொள்ளும் பண்பையும் இவர் வளர்த்துக்கொண்டார்.
“அடிக்கடி வெளியே சென்று பிறரோடு கலந்துரையாடுவது என் இயல்பன்று. ஆயினும், தொண்டூழியத்திற்காகப் பிறருடன் பணியாற்றி அவர்களது நிறைகுறைகளை அறிந்து செயலாற்றினேன்,” என்றார் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் மூத்தவரான ஸ்வேதா.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் தொழில்நுட்ப நிபுணரான தந்தையும் அறிவியல் பாட ஆசிரியரான தாயாரும் வீட்டில் ஏற்படுத்திய ஆதரவான, அறிவுபூர்வமான சூழலில் வளர்ந்த இவருக்கு வேதியியல் மிகவும் பிடித்த பாடம்.
“ஆய்வுக்கூட வேதிப் பொருள்களைச் சோதனைக்காகப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்கும். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கற்றவற்றைச் சக மாணவர்களிடம் காண்பிப்பேன்,” என்று சொன்ன ஸ்வேதா, தொடக்கக் கல்லூரியில் வேதியியல் பாடத்தை ‘எச்3’ நிலையில் படிக்க விரும்புகிறார்.
ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வில் ஏழு பாடங்களில் ‘ஏ1’ தேர்ச்சி பெற்றுள்ள ஸ்வேதா, மாதத்திற்கு ஒருமுறையாவது தொண்டூழியத்தில் ஈடுபட விரும்புகிறார்.
கடந்த ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வு எழுதிய 23,503 மாணவர்கள் வியாழக்கிழமை பிற்பகல் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
86.8 விழுக்காட்டினர் குறைந்தது ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள், கடந்த 30 ஆண்டுகளில் ஆகச் சிறந்தவை.
தொடக்கக் கல்லூரி, மில்லேனியா கல்வி நிலையம், பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை (ஜேஏஇ) வழியாக அதனைச் செய்யலாம்.
மாணவர்கள் வியாழக்கிழமை (ஜனவரி 11) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) மாலை 4 மணி வரை ‘ஜேஏஇ’க்கு விண்ணப்பிக்கலாம்.
சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நவ்யாவும் ஸ்வேதாவைப் போல அமைதியான, ஆரவாரமற்ற இயல்புள்ளவர்.
ஆயினும், உயர்நிலை இரண்டு முதல் புகைப்படம் எடுத்தல், காணொளிப் பதிவுசெய்தல் போன்றவற்றைச் சிறப்பாக மேற்கொண்டு அதற்கான மன்றத்தின் துணைத் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாத்தா பாட்டி பராமரிப்பில் வளர்ந்த நவ்யா, 16, தமக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் அவர்கள் அளித்ததாகக் கூறினார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேரவிருக்கும் இவர், காஸுஹிரோ ஹோரி என்ற ஜப்பானிய ஓவியரின் படைப்புகளை விரும்புகிறார். ஊடக, வரைகலை வடிவமைப்புத் துறையில் பணியாற்றுவது இவரது கனவு.