கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரர்களிடையே மகிழ்ச்சி அளவு குறைந்திருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை, குடும்பம் மற்றும் கலாசாரத்தை அரவணைத்து சமூகம், சுற்றுச்சூழல்மீது அக்கறை கொண்டு ஓரளவு பண வசதியையும் சமுதாயத்தில் அங்கீகாரத்தையும் பெற்றவர்கள் பொதுவாக கூடுதல் மனநிறைவுடன் இருப்பதும் தெரிய வந்தது. இந்த அம்சங்கள் எல்லாவற்றிலும் சரி சமமான கவனம் செலுத்துவோருக்கு இது பொருந்தும்.
பொருள்களுக்கும் சொகுசு அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருவோர் பொதுவாக ஆகக் குறைவாக மகிழ்ச்சியடைவது 2022 வாழ்க்கைத் தர கருத்தாய்வில் தெரிய வந்தது. பண வசதி இருப்பவர்களாக இருந்தும் அத்தகையோர் மகிழ்ச்சி குறைந்து காணப்பட்டனர்.
1996ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு 1,905 சிங்கப்பூரர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. 21 வயது அல்லது அதைத் தாண்டியோரைக் கொண்டு 2022ஆம் ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை கருத்தாய்வு நடத்தப்பட்டது.
உறவுகள், சுகாதாரம், வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு தங்களின் வாழ்க்கைத் தரத்தை கருத்தாய்வில் பங்கேற்றோர் கணித்தனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் தம்பையா சியோக் குவான், கெளரவ ஆய்வாளர் டான் சூ ஜியுவான், முனைவராகவிருக்கும் யுவென் வெய் லுன் ஆகியோர் கருத்தாய்வின் முடிவுகளை வியாழக்கிழமையன்று (ஓனவரி 11) ஒரு புத்தகத்தில் வெளியிட்டனர்.
குடும்பக் கொள்கைகள், கலாசாரம், பொருள் வசதி போன்ற அனைத்துக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் வழங்குவோர்தான் ஆக அதிக திருப்தியுடன் இருப்பதை அந்த ஆய்வாளர்கள் அறிந்தனர். வாழ்க்கைத் தரக் கருத்தாய்வில் பங்கேற்றோரில் 30 விழுக்காட்டினர் அவ்வாறு வாழ்க்கையை அணுகுபவர்கள்.