கொவிட்-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொதுத் துறை அமைப்புகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, 2,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) ஊழியர்கள் முன்வந்து கைகொடுத்தனர்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முன்களப் பணியாளர்களாக அவர்கள் சேவை வழங்கினர்.
அந்த 2,000 பேரில் 900 பேர் விமானச் சிப்பந்திகள். சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் நோயாளிகளைப் பராமரிக்க அவர்கள் உதவினர். அதனால் தாதியர்களும் இதர சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும், சிக்கலான உடல்நிலையால் கூடுதல் பராமரிப்பு தேவைப்படுவோர்மேல் கவனம் செலுத்த முடிந்தது.
அந்த அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் தேசிய நெருக்கடிகள் ஏற்பட்டால் அவற்றைக் கையாள, மனிதவளத் திட்டமிடல், பணியமர்த்தல் ஆகியவை தொடர்பில் ஒத்துழைக்க சுகாதார அமைச்சு, பொதுச் சேவைப் பிரிவு, எஸ்ஐஏ ஆகியவை இணக்கம் கண்டுள்ளன.
இதன் தொடர்பில் ஜனவரி 15ஆம் தேதி புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டதாக அவை கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்த முத்தரப்புப் புரிந்துணர்வுக் குறிப்பு, நாட்டின் கூட்டு மீள்திறனையும் எதிர்கால நெருக்கடிகளை விரைவாகக் கையாளும் திறனையும் வலுப்படுத்த உதவும் என்று அக்கூட்டறிக்கை குறிப்பிட்டது.
அமைதியான காலத்திலும் பராமரிப்புப் பணிகளில் பங்களிக்க விமானச் சிப்பந்திகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். நெருக்கடிநேரத்தைச் சமாளிக்கும் அவர்களது திறனைச் சோதிப்பதன் தொடர்பிலும் மூன்று அமைப்புகளும் இணைந்து பணியாற்றும்.
கிருமிப் பரவலின்போது போக்குவரத்துத் தூதர்கள், தொடர்புத் தடம் கண்டறியும் நிர்வாகிகள், சமூக சேவை அதிகாரிகள் போன்ற பணிகளிலும் எஸ்ஐஏ, ஸ்கூட் விமான நிறுவன ஊழியர்கள் கைகொடுத்தனர்.
தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருந்ததால், அவர்கள் முன்களப் பணியாளர்களாக வேலைபார்ப்பதற்கான உருமாற்றம் தொடர்பில் சுகாதார அமைச்சு, பொதுச் சேவைப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டதாக எஸ்ஐஏ கூறியது.
எஸ்ஐஏ ஊழியர்களின் இன்முகம், அக்கறை, தொழில்முறைச் செயல்பாடு, பயனாளர் சேவையில் அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளை அனைவரும் பாராட்டியதாக நிறுவனம் குறிப்பிட்டது.
இதன் மூலம் பெற்ற அனுபவமும் கற்ற புதிய திறன்களும், எஸ்ஐஏ ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்திக்கொள்ள உதவியதாகக் கூறப்பட்டது.
எஸ்ஐஏ ஊழியர்களிடமிருந்து சேவைத் துறைத் திறன்களைக் கற்றுக்கொள்ள தாதியர்க்கும் அது நல்ல வாய்ப்பாக அமைந்ததாக மருத்துவமனைகள் குறிப்பிட்டன.
புதிய புரிந்துணர்வுக் குறிப்பின்கீழ், ஏப்ரல் 2024லிருந்து கூ தெக் புவாட் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை இரண்டிலும் முதற்கட்டமாக 50 எஸ்ஐஏ, ஸ்கூட் ஊழியர்கள் பயிற்சி பெறுவர்.
தனியார் துறையின் மற்ற நிறுவனங்களும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் இவ்வாறு பங்கெடுக்க முன்வருவர் என்று சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட் கூறினார்.