சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸனுடன் ஒன்றிணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் லக்ஸனுடன் அவர் ஜனவரி 31ஆம் தேதியன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
“நியூசிலாந்துடன் சிங்கப்பூர் நீண்டகால, நெருங்கிய உறவு கொண்டுள்ளது. சிங்கப்பூர், நியூசிலாந்தின் ஐந்தாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி. விநியோகச் சங்கிலி மீள்திறன் மற்றும் பசுமைத் திட்ட பொருளியலில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் வலுவானது. சிங்கப்பூரும் நியூசிலாந்தும் சிலியுடன் இணைந்து மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தை தொடங்கிவைத்தன,” என்று ஜனவரி 31ஆம் தேதியன்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
“நியூசிலாந்தின் பிரதமராகப் பதவி ஏற்றது குறித்து திரு லக்ஸனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன். இருநாட்டு உறவு, வட்டார விவகாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த அவருடன் ஒன்றிணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார் பிரதமர் லீ.
நியூசிலாந்தின் பிரதமராக திரு லக்ஸன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.
பிரதமர் லீயின் நட்புறவுமிக்க, ஆக்கபூர்வமான தொலைபேசி அழைப்புக்கு திரு லக்ஸன், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 31ஆம் தேதியன்று நன்றி தெரிவித்தார்.
“சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே மிகுந்த நெருங்கிய நட்புறவு உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன். வட்டார நாடுகளின் பொருளியல், பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை இலக்குகள் ஆகியவற்றை மேம்படுத்த இருநாடுகளும் இணைந்து கூடுதலாகப் பங்களிக்கும்,” என்று திரு லக்ஸன் தெரிவித்தார்.