தானா மேரா படகு முனையம் $20 மில்லியன் செலவில் பொலிவூட்டப்படுகிறது.
நவீன வசதிகளுடன் தானியக்க முறை மூலம் அதிக பயணிகளை உள்ளடக்கும் வகையில் அந்த முனையம் மேம்படுத்தப்பட உள்ளது.
முனையத்தில் உள்ள மொத்த இடப்பரப்பையும் சிறப்பான முறையில் பயன்படுத்த அந்த புதுப்பிப்பு உதவும்.
தானா மேரா படகு முனையம் கடந்த 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆகக் கடைசியாக 2007ஆம் ஆண்டு அது பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை நீடிக்கும் மேம்பாட்டுப் பணிகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்று அந்த முனையத்தை நடத்தும் சிங்கப்பூர் உல்லாசப் படகு நிலையம் (எஸ்சிசி) கூறியது.
இது தொடர்பாக அந்த நிலையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
2.7 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட தானா மேரா படகு முனையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் 20 விழுக்காடு கூடுதல் பயணிகளை, அதாவது மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளுக்குப் பயனளிக்கும் என்று எஸ்சிசியின் தலைமை நிர்வாகி ஜாக்குலின் டான் தெரிவித்தார்.
புதிய அம்சங்கள் 2025 ஜனவரியில் தயாராகிவிடும். படகுப் பயணச்சீட்டை சுயமாக சோதனை செய்துகொள்ள 20 தானியக்க இயந்திரங்கள் அப்போது இருக்கும். பயணப் பைகளை ஏற்கும் நான்கு இயந்திரங்களும் தானியக்க குடிநுழைவு அனுமதி வாயில்களும் புதிய அம்சங்களுள் அடங்கும்.
சாங்கி விமான நிலையத்தில் இருப்பதைப்போன்ற குடிநுழைவு அனுமதி வாயில்கள் அவை என்று எஸ்சிசி கூறியது.
பயணிகளின் விரைவான புறப்பாட்டுக்கு இதுபோன்ற புதிய வசதிகள் உதவும் என்றும் அது குறிப்பிட்டது.
தற்போது, நுழைவுச்சீட்டுகளை முனையத்தில் உள்ள ஊழியர்களிடம் காண்பித்து பயணத்தைத் தொடங்க வேண்டும். அது இனி தானியக்கமயமாகும்.
அதேபோல, பயணப்பைகளை ஒப்படைப்பதிலும் குடிநுழைவு அனுமதி முறையிலும் முழுமையான தானியக்க வசதிகள் இடம்பெறும்.
மேலும், புறப்பாட்டு முனையம் மறுவடிவம் பெறுவதன் மூலம் அதனை 69 விழுக்காடு அதிக பயணிகள், அதாவது கூடுதலாக 200 பயணிகள் அதனைப் பயன்படுத்த முடியும்.
முனையத்தின் நுழைவாயில் அருகே கூடுதல் உணவு, பானக் கடைகள் நிறுவப்படும்.
பயணிகள் நடமாடும் பகுதிகளை புதுப்பிக்கும் பணிகள் மார்ச் மாதம் முதல் கட்டம் கட்டமாக நடைபெறும்.
படகுப் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அந்தப் பணிகள் ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக எஸ்சிசி தெரிவித்து உள்ளது.
மேலும், புதுப்பிப்புப் பணிகள் காரணமாக முனையத்தின் சேவைகளிலும் பயணத் திட்டங்களிலும் மாற்றம் இருக்காது என்றும் அது கூறி உள்ளது.