சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மேடைக்கலைப் பாடத்தை இரண்டாவது முக்கியப் பாடமாகவோ (செக்கண்ட் மேஜர்) சாதாரணப் பாடமாகவோ (மைனர்) பயிலலாம்.
மாணவர்களின் கற்றலில் கலைகளைச் சேர்க்கும் புதிய முயற்சியை தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன்கீழ் இந்த மாற்றம் இடம்பெறுகிறது.
இம்முயற்சியின் மூலம் கலைக் கல்வி கூடுதல் மாணவர்களைச் சென்றடைவதோடு அவர்கள் கலைகளில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக தேசிய பல்கலைக்கழகத்தின் காற்று இசைக் கருவிக் குழுவில் இடம்பெறும் 21 வயது ஷர்மிலா செல்வம் கூறினார்.
“தொடக்கப்பள்ளி முதல் நான் கலைகளில் ஈடுபட்டுள்ளேன். 10லிருந்து 12 ஆண்டுகளாக இசைக் குழுவிலும் மேடைக் கலைகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். பெரும் திறமைசாலிகளாக இருந்தும் ஊக்குவிப்பு இல்லாததால் கலைகளில் ஆர்வம் இழந்த பலரை நான் பார்த்திருக்கிறேன்,” என்றார் இரண்டாம் ஆண்டுப் பொறியியல் பட்டக் கல்வி மாணவரான திருவாட்டி செல்வம்.