கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு தொழில் நிறுவனத்திற்கு உதவ திட்டம் வகுத்த இருவருக்கு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) மொத்தம் $18,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மோ ஜுன் ஹாவ், 45, என்ற ஆடவர், குற்றமிழைத்தபோது ‘எஸ்ஆர்எஸ்’ என்ற பாதுகாப்பு ஒலிப்பான் சேவை வழங்கும் நிறுவனத்தில் விற்பனை ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். தன்மீதான இரண்டு கையூட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்கு $12,000 அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்படுமுன் அவர் மீதான மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஃபெய் சியோங் உணவு மேலாண்மை நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியாகப் பணியாற்றிய பெஞ்சமின் டிங் பெங் லின், 35, என்ற ஆடவர், தன்மீதான ஒரு கையூட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு நீதிமன்றம் $6,000 அபராதம் விதித்தது.
எஸ்ஆர்எஸ் நிறுவனத்திடமிருந்து லஞ்சமாகப் பெற்ற $4,526.95 பணத்தையும் தண்டமாக அவர் செலுத்த உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, திங்கட்கிழமையன்று (மார்ச் 11) எஸ்ஆர்எஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமான டான் ஹான் லியோங், 45, தன்மீதான கையூட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இன்னொரு கையூட்டுக் குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட டானுக்கு, ஒட்டுமொத்தத்தில் $33,000 அபராதமாக விதிக்கப்பட்டது.