மனநலப் பராமரிப்புத் துறையில் புதிய முதுநிலைப் பட்டக் கல்வி

மனநலப் பராமரிப்புத் துறையில் புதிய முதுநிலைப் பட்டக் கல்வி

2 mins read
65838b14-5dc0-42cf-bf70-a0626c82be10
அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் மார்ச் 21ஆம் தேதி இடம்பெற்ற மனநலக் கண்காட்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதிய பட்டக்கல்வி குறித்து அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மனநலப் பராமரிப்புக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், ஜனவரி 2025ல் புதிய முதுநிலைப் பட்டக் கல்வி அறிமுகம் காண்கிறது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியும் என்யுஎச்எஸ் ‘இயோ பூன் கிம் மைண்ட் சயின்ஸ்’ நிலையமும் இணைந்து அந்த முதுநிலைப் பட்டக்கல்வியை வழங்குகின்றன.

லேசானது முதல் மிதமானது வரையிலான மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் தென்படுவோருக்கு ஆதரவு வழங்கும் வகையில் மனநலப் பராமரிப்புத் துறையினர் இதன் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

அலெக்சாண்டிரா மருத்துவமனையில் மார்ச் 21ஆம் தேதி இடம்பெற்ற மனநலக் கண்காட்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதிய பட்டக்கல்வி குறித்து அறிவித்தார்.

முழுநேரக் கல்வியாக 18 மாதங்களுக்கும் பகுதிநேரக் கல்வியாக 30 மாதங்களுக்கும் அது வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக 20 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஐந்தாறு ஆண்டுகள் கழித்து இந்த எண்ணிக்கை 50 வரை உயர்த்தப்படலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து உளவியல், தாதிமை, மருத்துவம், சமூகசேவை போன்ற துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய இறுதி நாள் மே 1ஆம் தேதி.

அலெக்சாண்டிரா மருத்துவமனையின் மனநலக் கண்காட்சி ஆறு மாதங்களுக்கு நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 22 முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை, வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் பொதுமக்கள் நேரில் சென்று அதைக் காணலாம்.

ஏப்ரல் 23 முதல் for.sg/maelabbooking எனும் இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.

குறிப்புச் சொற்கள்