அட்மிரல்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அட்மிரல்டி லிங்க் புளோக் 483ல் மார்ச் 24ஆம் தேதி ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து இரவு 7 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஐந்தாவது மாடியிலுள்ள ஒரு வீட்டின் படுக்கையறைக்குள் தீ ஏற்பட்டதாக அது கூறியது.
புகையைச் சுவாசித்ததால் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
படுக்கையறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றினால் தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த புளோக்கிலிருந்து குறைந்தது 30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக ஷின் மின் நாளிதழிடம் பொதுமக்களில் ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரத் தீச்சம்பவங்களைத் தடுக்க, மின்செருகிகள்வழி (பிளக்குகள்) அளவுக்கதிகமாக சாதனங்களுக்கு மின்னேற்ற வேண்டாம் என்றும் அவை பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை எப்போதும் அடைத்து வைக்குமாறும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
பொதுமக்கள், மின்கலங்கள் அல்லது சாதனங்களை அதிக நேரத்துக்குக் கவனிப்பாரின்றி அல்லது இரவு முழுவதும் மின்னூட்டம் செய்யக்கூடாது.
அவர்கள் மின்கம்பிகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். மேலும், பழுதடைந்த அல்லது வெடித்த கம்பிகளை உடனடியாக மாற்றவோ அல்லது பழுதுபார்க்கவோ வேண்டும்.
மின்கம்பிகளைப் பாய்கள் அல்லது தரைவிரிப்புகளின்கீழ் வைக்க வேண்டாம் என்றும், சூடான பகுதியிலிருந்து அவற்றைத் தள்ளி வைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பாதுகாப்பு முத்திரை கொண்ட சாதனங்களையும் மின்செருகிகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மேல் விவரங்களுக்கு www.consumerproductsafety.gov.sg என்ற இணையத்தளத்தை நாடவும்.
பிப்ரவரியில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட வருடாந்தர புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டில் 1,954 சம்பவங்களுடன் அதிமாக தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இது 2022ஆம் ஆண்டின் 1,799 சம்பவங்களைவிட கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகம்.
மின்சாரத்தால் ஏற்பட்ட தீ, கவனிக்கப்படாத சமையல் ஆகியவை முறையே 597 மற்றும் 456 தீச்சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தன.