பன்றி இறைச்சி உள்ள உணவுவகை அடைக்கப்பட்ட இரண்டு உணவுக்கலன்களைப் பேரங்காடியிலிருந்து திருடி பிடோக்கில் உள்ள அல் அன்சார் பள்ளிவாசலின் பிரதான வாசலுக்கு அருகில் உள்ள உணவு விநியோக அலமாரியில் வைத்த ஆடவருக்கு ஏப்ரல் 4ல் 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உணவுக்கலன்களைத் திருடியதாகவும் சிங்கப்பூரில் உள்ள சமய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலில் ஈடுபட்டதாகவும் உணவு விநியோக ஓட்டுநரான 30 வயது இயன் போ மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பசை நுகரும் பழக்கம் உள்ள போ, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தக் குற்றங்களை அவர் தெரிந்தே செய்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதியன்று நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள பேரங்காடியிலிருந்து $9.50 பெறுமானமுள்ள உணவுக்கலன்களை அவர் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறகு அந்த உணவுக்கலன்களை எடுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு மிதிவண்டியில் சென்று அவற்றை வாசலில் இருக்கும் அலமாரியில் போ வைத்ததாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
அந்த அலமாரியில் பன்றி இறைச்சி உள்ள உணவுவகை அடைக்கப்பட்ட உணவுகலன்கள் இருப்பதைப் பார்த்து பள்ளிவாசலுக்குச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவற்றைப் படமெடுத்த பிறகு குப்பைத் தொட்டியில் வீசினர்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிவாசலின் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று போ கைது செய்யப்பட்டார்.