ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாற்றுப் புரத உணவுவகைகளைத் தயாரிக்கும் ‘வாவ்’ நிறுவனம் ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட காடை இறைச்சியை சிங்கப்பூரில் விற்பனை செய்யவிருக்கிறது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
‘ஃபோர்ஜ்ட் பாஃபே’ எனும் அந்த காடை இறைச்சி, ஏப்ரல் 3ஆம் தேதி, மோரி உணவகத்தில் ஊடகத்தினருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பாரம்பரிய முறையில் அல்லாத செயற்கை இறைச்சி வகைகளில் ‘வாவ்’ நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அதனால் இயற்கையான இறைச்சியுடன் சுவை சார்ந்த போட்டி இருக்காது என்று ‘வாவ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்ஜ் பெப்போ கூறினார்.
வாடிக்கையாளர்கள் வழக்கமாக உண்ணும் கோழி, பன்றி, மாடு ஆகியவற்றின் இறைச்சியைவிட வித்தியாசமான சுவையில் உள்ள ஒரு பொருளைத் தயாரிப்பது தங்கள் விருப்பமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனவே செயற்கைக் காடை இறைச்சியை ‘வாவ்’ நிறுவனம் சிட்னியில் தயாரிக்கிறது.
ஜப்பானிய வகைக் காடையின் மாதிரி உயிரணுவிலிருந்து, தனித்துவமான சுவை கொண்ட ‘பாஃபே’ தயாரிக்கப்படுகிறது.
‘ஃபோர்ஜ்ட் பாஃபே’ எனும் அந்த காடை இறைச்சியை, ஏப்ரல் 12 முதல் 27ஆம் தேதி வரை மோரி உணவகத்தில் சுவைத்துப் பார்க்கலாம்.
மற்ற உணவகங்களுடனும் இதுகுறித்துப் பேச்சு நடத்துவதாகத் திரு பெப்போ கூறினார்.
செயற்கைக் காடை இறைச்சியைத் தயாரிக்கும் ஆலைகளை உலகின் வெவ்வேறு இடங்களில் அமைப்பது குறித்துத் திட்டமிடுவதாக ‘வாவ்’ நிறுவனம் கூறியது.
மிகக் குறைவான நிதியுடன் கடினமாக உழைத்து, ஐந்தாண்டுகளில் சுவையான, இதுவரை இல்லாத புதுமையான பொருளைத் தங்கள் நிறுவனம் உருவாக்கியிருப்பதாகத் திரு பெப்போ கூறினார்.
‘வாவ்’ நிறுவனம், 2023 ஏப்ரலில் நெதர்லாந்தின் நீமோ அறிவியல் அரும்பொருளகத்தில் ‘மேம்மத் மீட்பால்’ எனும் இறைச்சிப் பந்தை வெளியிட்டது.
அழிந்துவிட்ட மேம்மத் எனும் உயிரினத்தின் மரபணுவைப் பயன்படுத்தி 40 பில்லியனுக்கும் மேற்பட்ட உயிரணுக்களைச் செயற்கையாக உருவாக்கி அது தயாரிக்கப்பட்டது.