சமூக சேவைத் துறையில் உள்ள வேலைகளுக்கு ஊதியம் சராசரியாக 8% அதிகரித்துள்ளது.
இதை என்சிஎஸ்எஸ் எனப்படும் சமூக சேவைகளுக்கான தேசிய மன்றம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிட்ட தனது ஆகக் கடைசி ஊதிய வழிகாட்டி வரையறைகளில் தெரிவித்துள்ளது.
உதாரணத்துக்கு, சமூக ஊழியர் ஒருவரின் தொடக்கநிலை ஊதியம் 2024 நிதியாண்டில் $3,820 என்று கூறப்பட்டுள்ளது. ஒப்புநோக்க, கடந்த 2023 நிதியாண்டில் இந்த தொடக்கநிலை ஊதியம் $3,790ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2024 நிதியாண்டு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், ஸ்டாஃப் நர்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த தாதியரின் ஆகக் கடைசி ஊதியம் $3,030ஆக இருக்கும் என்று ஆகக் கடைசி வழிகாட்டி வரையறைகள் குறிப்பிடுகின்றன. இதுவே 2023 நிதியாண்டில் $2,750ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டிகளின்படி அவர்களது ஊதியம் 10% உயர்ந்துள்ளதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சமூக சேவைத் துறை திறன், ஊதிய வழிகாட்டி விவரங்கள் யாவும் தேசிய சமூக சேவை மன்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த 2024 நிதியாண்டு வழிகாட்டிகளின்படி, $3 மில்லியனுக்கும் அதற்குக் குறைவாக உள்ள வரவுசெலவுத் திட்ட நிதியை நிர்வாகம் செய்யும் சமுதாய சேவை அமைப்பின் தலைமைப் பதவியில் இருப்பவரின் ஊதியம் $12,290 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023 நிதியாண்டின் ஊதிய நிர்ணயமான $10,690யுடன் ஒப்பிடும்போது 15% விழுக்காடு ஊதிய உயர்வு என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழிகாட்டி ஊதிய வரையறை திறனுள்ள, ஆனால் தங்கள் வரையறையின் எல்லைப் படியை எட்டாத ஊழியர்களுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கருத்துரைத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், இந்த சராசரி 8% ஊதிய உயர்வு சமூக சேவை ஊழியர்கள் தற்பொழுது பெறும் ஊதியத்துக்கும் சந்தை வெளியில் அவர்களின் ஊதிய வரையறையைப் பொறுத்திருக்கும் என்று விளக்கினார்.
எனவே, சந்தை வெளியில் இருக்கும் ஊதிய வரையறையைத் தாண்டி ஊதியம் பெறுவோருக்கு குறைந்த அளவிலேயே ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், சந்தை வெளியில் இருக்கும் ஊதியத்துக்கும் தங்களுடைய ஊதியத்துக்கும் அதிக இடைவெளி இருப்போர் அதிக ஊதிய உயர்வு பெறுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சமூக சேவைத் துறையில் தற்பொழுது 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.