ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் செரின் அரண்மனையில், ஜோகூர் இடைக்கால மன்னர் இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிமும் அவரது துணைவியார் கலீடா புஸ்டாமாமும் புதன்கிழமை (ஏப்ரல் 10) அளித்த நோன்புப் பெருநாள் பகல் விருந்தில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் கலந்துகொண்டனர்.
விருந்தின்போது, ஜோகூர் இடைக்கால மன்னரும் சிங்கப்பூர் அமைச்சர்களும், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் வலுவான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை மறுவுறுதிப்படுத்தினர்.
அச்சந்திப்பின்போது சிங்கப்பூர் அமைச்சர்கள், 17வது மலேசிய மாமன்னர் தம்பதியரான சுல்தான் இப்ராஹிமுக்கும் அரசியார் ராஜா ஸரித் சோஃபியாவுக்கும் தங்கள் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொண்டனர்.
ஆண்டுதோறும் ஜோகூர் அரச குடும்பத்தினரின் நோன்புப் பெருநாள் பகல் விருந்தில் கலந்துகொள்ள சிங்கப்பூர் தலைவர்கள் அழைக்கப்படுவது வழக்கம். இது சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான நீடித்த உறவுகளைப் பிரதிபலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் ஓங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த ஜோகூர் அரச குடும்பத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜோகூர் நண்பர்களின் நட்புணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இருதரப்புக்கும் பலன் தரும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் போன்ற பல்வேறு திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். மக்கள் பரிமாற்றத்துக்கும் பொருளியல் உறவுகளுக்கும் மேலும் வலு சேர்க்க கடப்பாடு கொண்டுள்ளோம். ஜோகூர் பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.