திருக்குர்-ஆனின் வசனங்களை அரபி மொழியில் மனப்பாடமாக ஒப்புவிக்கின்றனர் நண்பர்களான அஃபீஃபும் அமரும்.
புனித ரமலான் மாதத்தை ஒட்டி டன்லப் ஸ்திரீட்டில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நோன்பு மாதம் முழுவதும் நடைபெற்ற தராவீஹ் சிறப்புத் தொழுகையின் ஒரு பகுதியை இவர்கள் வழிநடத்தியுள்ளனர்.
தினந்தோறும் நடத்தப்பட்ட 20 'ரக்காஅத்' தொழுகையின் கடைசி நான்கு 'ரக்காஅத்' தொழுகைகளை வாரநாட்களில் ஒருவரும் வாரயிறுதிகளில் ஒருவரும் என இவர்கள் வழிநடத்தினர்.
இதர 16 'ரக்காஅத்' தொழுகைகளை அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் அஸீஸுல்லாஹ் ஹசனி, துணை இமாம் சம்சுதீன் ஆகியோர் வழிநடத்தினர். ரமலான் மாதம் முழுவதிலும் மொத்த திருக்குர்-ஆன் வசனங்களும் இத்தொழுகையின் மூலம் ஓதப்பட்டன.
அஃபீஃப் முகமது ரயான், 19, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இறுதியாண்டு பயில்கிறார்.
தொடக்கநிலை நான்கின் ஜூன் மாத விடுமுறையின்போது பென்கூலன் பள்ளிவாசலில் உள்ள திருக்குர்-ஆன் ஓதும் பயிற்சி வகுப்பில் தன்னை முதன்முதலில் தன் தந்தை சேர்த்துவிட்டதை அஃபீஃப் நினைவுகூர்ந்தார்.
திருக்குர்-ஆனை கற்பதைத் தொடக்கத்தில் மிகவும் கடினமாக உணர்ந்தார் அஃபீஃப். நாளடைவில் பயிற்சி ஆசிரியரின் சுவாரசிய வகுப்புகளாலும் குடும்பத்தின் உந்துதலாலும் இப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதை எதிர்நோக்க ஆரம்பித்தார்.
“பள்ளி முடிந்ததும் தினந்தோறும் சில மணி நேரம் இவ்வகுப்பிற்கும் செல்வேன். ஆரம்பத்தில் பொருள் புரியாமல் மனனம் செய்வது கடினமாக இருந்தது. பிற்பாடு பொருள் புரிந்து கற்க ஆரம்பித்தபோது அதிக ஆர்வம் ஏற்பட்டது,” என்றார் அஃபீஃப்.
அதையடுத்து நான்கு ஆண்டுகளில் முழுவதுமாக திருக்குர்-ஆனை மனப்பாடம் செய்து முடித்துவிட்டார் அஃபீஃப். இவருடைய மூத்த சகோதரியான 23 வயது நஹீதா ரேசாவும் திருக்குர்-ஆனை மனப்பாடம் செய்து வருகிறார். நஹீதா அரபி இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.
அஃபீஃப்பின் நண்பரான அமர் இபின் முகமது, 18, குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து கடந்த 2016ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தவர். தனது 9 வயதில் திருக்குர்-ஆன் படிக்க தொடங்கிய அமர், இங்கு குடிபெயர்ந்த பின்னர் அஃபீஃப் சென்ற அதே திருக்குர்-ஆன் பயிற்சி வகுப்பில் தன் தம்பியுடன் இணைந்து சேர்ந்தார்.
ஏறத்தாழ நான்கு முதல் ஐந்தாண்டுகளில் தான் திருக்குர்- ஆனை மனப்பாடம் செய்து முடித்ததை இறைவன் அளித்த வரமாக கருதுவதாகவும் தான் கற்ற பாடங்கள் எதிர்காலத்தில் நற்பாதையில் தன்னை வழிநடத்தி செல்லும் என்றும் அமர் கூறினார்.
“ஒருமுறை முழுவதுமாக படித்து முடித்து சான்றிதழ் பெற்றதோடு விட்டுவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எடுத்த முயற்சிக்குப் பலன் இல்லாமல் போய்விடும். சமயக் கூறுகளைத் தொடர்ந்து படிக்க படிக்கவே அதன் ஆழம் விளங்கும்,” என்று அமர் மேலும் தெரிவித்தார்.
தற்போது தனியார் கல்விநிலைய வழியாக இணைய பாதுகாப்பு துறையில் இறுதியாண்டு பட்டயக்கல்வி படித்து வரும் அமர், திருக்குர்-ஆன் பயிற்சி வகுப்புகளில் நண்பர்களுடன் சேர்ந்து ஆரோக்கியமான போட்டி சூழலில் கற்பது நன்றாக இருக்கும் என்று பகிர்ந்தார்.
இது போன்று பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதில்லை என்ற தவறான கருத்தும் நிலவுகிறது என்று குறிப்பிட்டார் அமர்.
திருக்குர்-ஆனை தினந்தோறும் படிப்பதால் நினைவாற்றல் மேம்படுவதால் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு அமரும் அவரின் நண்பர்களும் பள்ளிக் கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று மேலும் கூறினார் அமர்.
திருக்குர்-ஆனின் அனைத்து வசனங்களையும் அதன் கருத்துக்களோடு 'ஹஃப்ஸ்' முறைப்படி கற்றுக்கொண்டு ஒப்புவிக்கும் இவர்கள் வருங்காலத்தில் இஸ்லாமிய சமயத்தின் பல்வேறு கூறுகளையும் கற்றுத்தேர்ந்து இம்மார்க்கத்தில் பாண்டித்தியம் பெற விரும்புவதாக உற்சாகத்துடன் தமிழ் முரசிடம் தெரிவித்தனர் இவ்விரு இளையர்கள்.