உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் உட்பட பல நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மலேசியா நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடந்த 18ஆம் தேதி முதல் செயல்படுத்தியது. அந்நாட்டில் எல்லைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் இங்கு வரமுடியாது போனது. இதனால், சேவைத் துறைகளில் முடக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பரவலாக எதிரொலித்தது.
பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு, துப்புரவு, உணவகம், சில்லறை வர்த்தகம் என பல துறைகளில் 300,000க்கும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் 1,000 சுகாதாரத் துறை ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 100,000 மலேசியர்களுக்கு இங்கு தங்கும் வசதி இல்லை. கணிசமானோர் தினந்தோறும் மலேசியா சென்று வருகின்றனர்.
நிறுவனங்கள் தங்களின் மலேசிய ஊழியர்களை சிங்கப்பூரில் தங்க வைக்க முயற்சி எடுத்தன. அரசாங்கம் நிறுவனங்களுக்கு தோள் கொடுத்தது. தங்குமிட ஏற்பாட்டுக்காக ஒவ்வோர் ஊழியருக்கும் ஓர் இரவுக்கு $50 நிதி ஆதரவை அறிவித்தது.
தங்க இடவசதி இல்லாமல் தவித்த மலேசியர்களுக்கு சிங்கப்பூர் மக்களும் விரைந்து உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக சில சவால்களை எதிர்நோக்கும் பலரில் நிறுவனத்தின் நிறுவனரும் நிபுணத்துவ இயக்குநருமான திரு ஆண்டனி ஜெயாவும் ஒருவர்.
கிட்டத்தட்ட இருநூறு ஊழியர்கள் கொண்ட பாதுகாப்புச் சேவை வழங்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் ஃபசிலிடீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 40 பேர் மலேசியர்கள்.
அவர்கள் எல்லாரும் ஜோகூர் பாருவில் தங்குகின்றனர். அறிவிப்பு வந்த நாள் இரவு முழுதும் திரு ஜெயாவும் நிர்வாக அதிகாரிகளும் தூங்கவே இல்லை. மலேசிய ஊழியர்களுக்கான தங்குமிட வசதிக்கு நிறுவனம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.
“அப்படி இருந்தும் 15 பேரால் வரமுடியவில்லை. 25 பேருக்கான வசதி செய்யப்பட்டது. ஐவர் தங்கள் உறவினர்களின் வீட்டில் தங்க முடிவெடுத்தனர். மற்ற 20 பேருக்கு விடுதிகளிலும் வீடுகளிலும் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
கடந்த 15 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் செயல்பட்டுவரும் திரு ஜெயா, இந்தச் சவால் வித்தியாசமானதாகவும் கடுமையாகவும் இருப்பதாக சொன்னார்.
அவரது நிறுவனம் 25 ஆண்டுகளாக சுத்திகரிப்புச் சேவையையும் வழங்கி வருகிறது. சுமார் 600 பேர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்டோர் மலேசியர்கள்.
“சுத்தம் செய்வது, பாதுகாப்பு, உணவகம் போன்ற துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் சேவை அத்தியாவசியமாக உள்ளது. இந்நாட்டில் மனிதவளம் பற்றாக்குறையாக இருப்பதால் முழுக்க முழுக்க சிங்கப்பூரர்களைச் சார்ந்திருப்பது சாத்தியமல்ல. மேலும் சிலருக்கு இத்தகைய வேலைகளில் ஈடுபாடு இல்லை,” என்று கூறினார் திரு ஜெயா.
குடும்பத்தைப் பிரிவதே சிரமம்
லிட்டில் இந்தியாவிலுள்ள முடி திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் திரு ராஜ்குமார் தினந்தோறும் ஜோகூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூர் வந்துசெல்வார்.
இனி இரண்டு வாரங்களுக்குக் குடும்பத்தினரைப் பார்க்க இயலாது என்பது வருத்தத்தை அளிக்கிறது.
வயது முதிர்ந்த தாயாரும் மனைவியும் ஒரு வயது குழந்தையும் அவரை நம்பி உள்ளனர்.
“வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாது. இல்லையெனில் நான் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் இருந்திருப்பேன். தற்போது என் மனைவிதான் என் தாயாரையும் குழந்தையையும் பார்க்கவேண்டும். சாமான் வாங்கப் போகவேண்டும்,” என்றார் அவர்.
புதிய அனுபவம்
பொதுப் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றும் 33 வயது சக்தி குமரன் இதுவரை நட்சத்திர விடுதிகளில் தங்கியதே இல்லை. இப்போது இரு வாரங்களுக்கு ஹோட்டலில் தங்கியிருப்பது மாறுபட்ட அனுபவமாக உள்ளது.
“எனது நிறுவனம் சிங்கப்பூரின் மத்திய பகுதியில் நட்சத்திர விடுதியில் எனக்குத் தங்குமிடம் வழங்கியுள்ளது. என் கனவில்கூட இந்த மாதிரி இடத்தில் தங்குவேன் என்று நான் எண்ணியதில்லை,” என்று தெரிவித்தார் ஐந்தாண்டுகளாக இங்கு பணிபுரிந்துவரும் திரு சக்தி.
சிரமத்திலும் ஒரு சந்தோஷம்
இந்திய உணவகம் ஒன்றில் பல்லாண்டுகளாகப் பணியாற்றிவரும் திரு கணேசன் சோமசுந்தரத்திற்கு இந்த சிரமகாலத்திலும் ஒரு சந்தோஷம். தற்போது மனைவியோடு லிட்டில் இந்தியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஒன்றாகத் தங்கி வேலை பார்்க்கும் அவர் இப்போது அந்த நாள் நினைவுகளில் திளைத்தி ருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தினந்தோறும் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துபோகும் அவர், 1999ஆம் ஆண்டுக்கு முன்னர் நான்காண்டுகள் சிங்கப்பூரிலேயே தங்கி வேலை செய்தார். அப்போது இங்கு வேலை செய்யும் மலேசிய பெண்ணைக் காதலித்து மணம் முடித்தார்.
கேமரன் மலையைச் சேர்ந்த அவர் திருமணத்திற்குப் பின்னர் ஜோகூரில் வீடு வாங்கி குடியேறினார்். இப்போது தாங்கள் இங்கே தங்கியிருப்பது பழைய நினைவுகளை எழுப்புவதாகக் கூறினார் கணேசன். தங்களைச் சார்ந்து குடும்பத்தினர் எவரும் இல்லை என்பதால், இருவரும் நிம்மதியாக இங்கே இருக்க முடிகிறது என்றனர்.
செய்யும் தொழிலே தெய்வம்
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூரில் துப்புரவுப் பணியைச் செய்து வரும் 58 வயது திரு நந்தகுமாருக்கு போதுமான சேமிப்பு இருந்தாலும்கூட, விடுப்பு எடுக்கும் எண்ணம் கொள்ளவில்லை.
“என்னுடன் வேலை செய்த ஒருவர் நாடு திரும்பிவிட்டார். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. கடந்த பல வாரங்களாகவே பணியாளர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. நாங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுகிறோம். நானும் சென்றுவிட்டால் மேலும் சிரமமாக இருக்கும்,” என்றார் திரு நந்தகுமார்.
நல்ல வேலையில் இருக்கும் அவரது இரு மகன்களும் அவரை வேலையிலிருந்து ஓய்வுபெறுமாறு கூறிவருகின்றனர். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. “எனது வாழ்க்கைக்கு கைகொடுத்தது இந்த வேலைதான். என்னால் முடிந்தவரையில் இந்த வேலையைச் செய்வேன்,” என்றார் அவர்.
உணவும் உறைவிடமும் தந்து உதவும் உள்ளங்கள்
திடீர் கட்டுப்பாடுகளால் திண்டாடிப் போன மலேசியர்களுக்கு பலவழிகளில் சிங்கப்பூரர்கள் உதவி நல்கி வருகின்றனர்.
திரு சசிகுமார், 45, திருமதி ஷியாமளா தம்பதி சிரமப்படும் மலேசியர்களுக்கு உணவு, சுவை நீர் பானங்களை இலவசமாக அளித்து வருகின்றனர்.
உணவுப் பொட்டலங்களையும் சுவை நீர் டப்பாக்களையும் எடுத்துக்கொண்டு அட்மிரல்டி, மார்சிலிங், கிராஞ்சி எம்ஆர்டி நிலையங்களுக்கு டாக்சி அல்லது நண்பர்களின் காரில் சென்று இவர்கள் தேவைப்படுவோரைக் கண்டறிந்து உதவி வருகின்றனர்.
“பயணத் தடையால் தவிக்கும் சில மலேசியர்களைப் பற்றி செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் படித்தேன். எல்லோருக்கும் போதிய வசதிகள் இருக்காது. உடனடி செலவுக்குப் பணமில்லாமலும் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் தினசரி உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதுகூட சவாலாக அமையலாம்,” என்றார் 35 வயது திருமதி ஷியாமளா.
சமூக ஊடகத் தளங்களில் உதவி தேவைப்படுவோருக்கு அழைப்பு விடுத்தார் அவர். தங்கள் நண்பர்களின் மூலமும் உதவி தேவைப்படுவோரை கண்டறிவதாகக் கூறினார் 45 வயது திரு சசிகுமார்.
மலேசியர்களுக்கு உதவி வரும் குமாரி கெல்லி கனகா
‘கெல்லிஸ்காமெடி’ என்ற பெயரில் இணையத்தில் நகைச்சுவைக் காணொளிகளை வெளியிட்டு வரும் குமாரி கெல்லி கனகாவையும் அணுகினார் திருமதி ஷியாமளா. இத்தம்பதியினர் வழங்கும் சேவைகளைப் பற்றி விழிப்புணர்வு தரும் பதிவும் செய்து உதவினார் கெல்லி, 30.
கெல்லியும் மலேசியர்களுக்கு உதவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பல்லாயிரக்கணக்கன ரசிகர்களைப் பெற்றுள்ள கெல்லி, உதவி தேவைப்படும் மலேசியர்களையும் உதவி வழங்கத் தயாராக இருக்கும் சிங்கப்பூரர்களையும் இணைத்து வருகிறார்.
இதுவரையில் 20 மலேசியர்களுக்கு உதவியுள்ளார் கெல்லி.
துப்புரவாளர்களாக சிங்கப்பூரில் பணியாற்றும் இரண்டு மலேசியர்களுக்கு மார்ச் 17ஆம் தேதியிலிருந்து தமது வீட்டில் இலவசமாகத் தங்க இடமளித்துள்ளது கெல்லியின் குடும்பம்.
தெரியாதவர்களை வீட்டில் தங்க அனுமதிப்பதால் கிருமித்தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் சிலருக்கு இருக்கலாம் என்றும் இந்த நிலைமை இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கலாம் என்ற பயமும் மக்களிடம் இருக்கலாம் என்றும் சொன்னார் கெல்லி.
எனினும், இந்த நேரத்தில் அச்சத்தைப் பரப்பவுதைவிட மனித நேயத்தையும் கருணையையும் காட்டுவது அவசியம் என்பது கெல்லியின் கருத்து.
மலேசியர்களுக்கு உதவிய ஷாஃபி பாடா ஜபாரி, சோஃபியா
திரு ஷாஃபி பாடா ஜபாரியும் (34 வயது) அவரது மனைவி 30 வயது திருமதி சொஃபியா பேகமும் பாதுகாவல் அதிகாரிகளாக பணிபுரியும் மூன்று மலேசியர்களுக்குத் தங்குவதற்கு இடமளித்துள்ளனர்.
நான்கு அறை வீட்டில் வசிக்கும் இத்தம்பதி, தம் நண்பர்களின் குழந்தைகளுக்காக வீட்டில் ஒர் அறையை ஒதுக்கியிருந்தனர். தற்போது அந்த அறையை மூன்று மலேசியர்களுக்கு இலவசமாக தந்துள்ளனர். மார்ச் 19ஆம் தேதியிலிருந்து மூவரும் அங்கு வசித்து வருகின்றனர்.
மலேசியர்களின் இக்கட்டான சூழ்நிலையைப் பற்றி அறிந்தபோது, தங்குவதற்கு இடம் தேடும் மலேசியர்களுக்கான தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அழைப்புவிடுத்தார் திரு ஷாஃபி.
அதன் மூலம் திரு வசந்தகுமார், திரு கார்த்திக், திரு மோகன் ஆகிய மூன்று மலேசியர்கள் தங்குவதற்கு இடம் தேடுவதாக அறிந்தனர் ஷாபியும் சொஃபியாவும்.
“குறுகிய காலகட்டத்திலும் அரசாங்கம் முடிந்த அளவிற்கு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அந்த பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறு உதவியாக இருந்தாலும் நம்மால் முடிந்ததை செய்வது முக்கியம். அன்புடன் அனைவரையும் அரவணைப்போம்,” என்று கூறினார் திரு ஷாஃபி.