‘பிரஹம் அங்கா’
நேரலை காணொளிகள் மூலம் இணைய வரத்தகத்தில் பிரபலமாகி வரும் உள்ளூர் வர்த்தகம் ‘பிரஹம் அங்கா’.
சகோதரிகள் ல. நிஷாலினி, 27, ல. வைஷ்ணவி, 26, இருவரும் அம்மாவுடன் இணைந்து இந்த வர்த்தகத்தை நடத்துகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக தீபாவளிச் சந்தையில் மருதாணி போடும் சேவை வழங்கி வந்த நிஷாலினி, இந்த ஆண்டு இணையத்தில் ஆடை, அணிகலன் வர்த்தகத்தில் இறங்கியுள்ளார். கொவிட்-19 காரணத்தால் பலரும் வெளிநாடு சென்று ஆடைகளை வாங்க முடியாது என்றும் இணையத்தில் வசதியாக வாங்கும் வாய்ப்பு இருப்பதால் பலரும் இணையம்வழி முன்கூட்டியே தீபாவளி ஆடைகளை வாங்கலாம் என்றும் கூறினார் நிஷாலினி.
சேலைகள் அதற்கு ஏற்ற ஆபரணங்களுடன் வரும் நாட்களில் சேலைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
பெரும்பாலும் இண்ஸ்டகிராம் பக்கத்தில் சேவையை வழங்கும் ‘பிரஹம் அங்கா’ பல இளையர்களைக் கவர்கிறது. மேலும், நேரடி காணொளி மூலம் சேலைகளை அறிமுகப்படுத்துவதால் பலரையும் எட்ட முடிகிறது என்றார் நிஷாலினி. இந்திய ஆடைகளுக்கு ஏற்ற தோடு, சங்கிலி போன்ற ஆபரணங்களையும் இவர்கள் படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவேற்றியுள்ளனர்.
“படத்தில் பார்ப்பதைப் போன்ற ஆடைகள் வந்து சேராது என்பதால் பலருக்கும் இணையத்தில் ஆடைகள் வாங்குவதில் தயக்கம் உள்ளது. இந்த தயக்கத்தையும் அச்சத்தையும் போக்க கடும் முயற்சி எடுக்கிறோம். படத்தில் பதிவாகாத சில நிறங்கள் காணொளியில் பதிவாகவும் என்பதால் ஒரு சேலைக்கு படத்தோடு காணொளிப் பதிவையும் இடுகிறோம்,” என்றார் நிஷாலினி.
https://www.instagram.com/brahamanga
‘காட்டன் கெண்டிஸ் அலியுரா’
சமூக ஊடகங்களில் நேரலைக் காணொளிப் பதிவுகள் மூலம் இந்திய ஆடைகளைக் காட்சிப்படுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர், சகோதரிகள் ஷாலினி நாயுடு, 30, சிந்து எனப்படும் துர்காதேவி நாயுடு, 33 இருவரும்.
கடந்த ஆறு ஆண்டுகளாக ‘காட்டன் கெண்டிஸ் அலியுரா’ எனப்படும் இணைய வர்த்தக சேவையை நடத்தி வரும் இந்த சகோதரிகள், பொதுவாக தீபாவளிக் காலத்தில், தேக்கா விற்பனைச் சந்தை, ‘ஸாக் சலாம்’ இந்தியக் கண்காட்சி போன்ற இடங்களில் கடை நடத்துவார்கள். கொவிட்-19 சூழலில் கடை சாத்தியமில்லாததால், இணையத்தில் நேரலை மூலம் ஆடைகளை விளம்பரப்படுத்தத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடிக்கும் இவர்களின் நேரலைக் காணொளிகளில் கிட்டத்தட்ட 50 சேலைகள் இடம்பெறும். “காணொளிகளுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வரவேற்பு கிடைக்கிறது,” என்றார் சிந்து.
பஞ்சாபி ஆடை, ஜிப்பா, குழந்தை ஆடைகளை என்று பலவித ஆடைகளை விற்றாலும் முக்கியமாக சேலைகளையே இவர்கள் விற்கிறார்கள். மற்ற வர்த்தகர்களிடம் கிடைக்காத மாறுபட்ட வடிவமைப்புகளினால் ஆடைகளை வழங்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்.
“தீபாவளிக் காலத்தில் புதிய சேலை வடிவங்களை மக்கள் எதிர்ப்பார்ப்பது வழக்கம். முன்பு இந்தியாவிற்கு நேரடியாக சென்று சேலைகளைத் தேர்வு செய்து வாங்குவோம். தற்போது சிறிய அளவில் இறக்குமதி செய்கிறோம். நேரலைக் காணொளிகள் மூலம் அதை வேகமாக விற்றுவிட முடிகிறது,” என்றார் சிந்து.
புதிய வடிவமைப்பு, வண்ணங்களுடன் நாம் கேட்கும் உடையையும் தேடி வாங்கித் தருகிறார்கள். அதனால் இத்தகைய இணைய சேவைகள் வசதியாக இருக்கின்றன என்றார் ‘காட்டன் கெண்டிஸ் அலியுரா’வின் வாடிக்கையாளர்களில் ஒருவரான 30 வயது திருமதி திலகவதி மாரிமுத்து.