சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய நாட்டு ஊழியர்களுக்கு உதவு வதற்கான திட்டங்களையும் சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் ஆராய்ந்து வருகிறது.
வேலையிடத்திற்கு அப்பாற்பட்ட சூழலில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவிதங்களால் பாதிப்படைவோரின் குடும்பங்களுக்கு வழங்கீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன்.
சிங்கப்பூரில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இந்திய நாட்டு ஊழியர்கள், எந்த ஒரு சூழலிலும்; அதாவது போக்குவரத்தின் போதோ அல்லது வாரயிறுதி நாட்களிலோ, விபத்துகளில் சிக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகிடைக்க இது வழிவகுக்கும் என்றார் அவர்.
சமூக அமைப்புகளுடனும் காப்புறுதி வழங்கும் நிறுவனங்களுடனும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியத் தூதரகம் முயற்சி எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்னும் சில மாதங்களில் அந்தத் திட்டம் முழுமையாக வரையப்பட்டு அறிமுகம் காணும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சமூகத்தில் பலர் இந்தத் திட்டத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் இந்தத் திட்டம் வெற்றி காண்பதில் தமக்கு தனிப்பட்ட மனநிறைவு கிட்டும் என்றும் கூறினார் அவர்.
ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் வகையில் அவை அமையும் என்றும் கூறினார்.
தற்போது, வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவ காப்புறுதி மட்டுமே அவசியமானது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் $15,000 மருத்துவ செலவுகளை ஏற்கும் வண்ணம் உள்ள அந்தக் காப்பீடு ஒவ்வோர் ஊழியருக்கும் இருக்கவேண்டும். அதற்கான கட்டணங்களை முதலாளிகள் ஏற்கும் வண்ணமும் சில நிபந்தனைகளுடன் ஊழியர்களுடன் இணைந்து ஏற்கும் ஏற்பாடும் உள்ளது.
அடுத்ததாக, இந்த நோய்ப் பரவல் சூழலில் ஊழியர்களின் மனநலம் மிகவும் முக்கியம் என்றும் அதை உறுதிசெய்து மேம்படுத்தும் முயற்சியில் சமூக இயக்கங்கள் செயல்படுவதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார் திரு குமரன்.
இந்தியத் தூதரகம், மனிதவள அமைச்சு, இந்திய நிர்வாகக் கல்விக் கழகம் (ஐஐஎம்) முன்னாள் மாணவர் சங்கம், 'இட்ஸ்ரெய்னிங்ரெயின்கோட்ஸ்' எனும் லாபநோக்கற்ற சமூக அமைப்பு இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கான உள்ளூர் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்தது.அதுபற்றி விவரித்த திரு குமரன், கடந்த ஆண்டு இறுதியில் அவ்வாறான ஒரு சுற்றுப்பயணத்தின்போது தாமும் இணைந்து பேருந்தில் பயணித்து ஊழியர்களுடன் உரையாடியதை நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரில் மனிதவள அமைச்சு ஊழியர்களின் நலனில் மிகுந்த கவனமும் அக்கறையும் எடுத்து வருவதாகக் கூறிய அவர், இந்தியத் தூதரகம் அவர்களுடன் இயன்றவரை இணைந்து செயலாற்றி வந்ததைச் சுட்டினார்.
இந்தியச் சமூக அமைப்புகளுடன் இணைந்து 'வைஃபை' கருவி வழங்கியது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊழியர் மன நலத்திற்காகவும் உற்சாகமூட்டவும் அவர்களைச் சந்திப்பது என பல வழிகளில் ஊழியர்களுக்காக இந்தியத் தூதரகம் செயலாற்றி வருவதை அவர் பகிர்ந்தார்.