சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 150 ஓவியக் கலைஞர்கள், 400க்கும் மேற்பட்ட ஓவியங்களை ஓர் அரிய முயற்சிக்காக சமர்ப்பித்துள்ளனர். மே 27 முதல் ஜூன் 23 வரை 'ஞானி ஆர்ட்ஸ்' கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 'அண்ட் ஷி ஸ்லேஸ் தி டீமன்' (And She Slays the Demon) என்ற இணையக் கண்காட்சியில் அனைவரும் இலவசமாகக் கண்டு களிப்பதற்காக இந்த ஓவியங்கள் இடம்பெறும்.
இந்தியாவின் கொவிட்-19 சூழலுக்கு உதவும் முயற்சியில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், இந்தக் கண்காட்சியின் நன்கொடை பங்காளியாக செயல்படுகிறது. திரட்டப்படும் நிதி, உயிர்வாயு கலன் உள்ளிட்ட உயிர்காப்பு கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும். இந்தக் கண்காட்சி தம்மைப் பொறுத்தவரை நம்பிக்கையைப் பற்றியது என்றார் பெங்களூருவைச் சேர்ந்த முழுநேர ஓவியரான ஜி. சுப்ரமணியம், 69.
"சிரமப்படும் மக்களின் நலனுக்காக ஓவியக்கலை துணைபோவதைக் காணும்போது என் மனம் குளிர்கிறது," என்று கூறினார். இந்தக் கண்காட்சியைத் திட்டமிட்டு தொடங்க கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆனதாக ஏற்பாட்டாளரும் கலைஞருமான பி. ஞானா தெரிவித்தார். அருங்காட்சிக் காப்பாளர்கள் வித்யா கௌரேசன், பவாத் தம்கனாட் இருவரையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தியதுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்களைப் பல வாரங்களாக ஆராய்ந்ததாக அவர் கூறினார்.
செய்தி: கி.ஜனார்த்தனன்