சமூகத்திற்குப் பங்காற்றி வரும் அல்லது குறிப்பிடத்தக்க சாதனை படைத்த ஒன்பது சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கும் வகையில் அணிவகுப்பின் இறுதி அங்கம் அமைந்தது. அதில் இரண்டு தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர்.
‘கிருஷ்ணா’ஸ் ஃப்ரீ மீல்ஸ்’ (Krsna’s Free Meals) என்ற சமூகநல உணவகத்தைச் சேர்ந்த 52 வயது குமாரி லதா கோவிந்தசாமி, முதுமை வயதிலும் நெடுந்தொலைவு ஓட்டக்காரராகத் திகழும் 74 வயது திரு க. சந்திரசேகரன் ஆகியோரே அவர்கள். தங்கள் பெற்றோரின் கருணையை உணர்ந்த திருமதி காந்தினி தேவி தாஸி, திருமதி சந்திரலத்திகா தேவி தாஸி, லதா ஆகிய சகோதரிகள் தொடங்கிய முயற்சிதான் லிட்டில் இந்தியாவின் வீராசாமி ரோட்டில் அமைந்துள்ள கிருஷ்ணா’ஸ் உணவகம்.
பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை நம்பிச் செயல்படும் இந்த உணவகம், தினமும் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறது.
“இவ்வாண்டு தேசிய தினக் கருப்பொருளான ‘ஒன்றிணைந்த நமது சிங்கப்பூர் உணர்வு’ என்பதற்கு ஏற்ப கிருஷ்ணா’ஸ் உணவகம் காலை மற்றும் மதிய உணவுகளை, சிரமமான சூழலில் இருப்போருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது. மற்றவர்கள் செய்யும்வரை காத்திருக்காமல் நாமே முன்னெடுத்து சமூகத்திற்கு உதவலாம் என்பதற்குச் சான்றாக கிருஷ்ணா’ஸ் உணவகம் விளங்குகிறது. சிறிதளவு கருணையும் நன்றியுணர்வும் இருந்தாலே போதும்,” என்றார் கிருஷ்ணா’ஸ் உணவகத்தின் மக்கள் தொடர்பு நிர்வாகி லதா.
வசதி குறைந்தவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பெருமளவில் கைகொடுத்துள்ள இந்த உணவகம், 2018ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கொவிட்-19 கிருமித்தொற்று தொடங்கிய காலத்தில் தங்குவிடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்குக் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக தினமும் 1,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கியதை நினைவுகூர்ந்தார் லதா. அத்துடன் இம்மாதம் 9ஆம் தேதி தேசிய தின உணர்வில் 1246 பரிசுப் பைகளையும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கியது கிருஷ்ணா’ஸ் உணவகம்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றொருவர் சந்திரசேகரன். இவர் 56 வயது வரை உடற்பயிற்சியில் ஈடுபடாதவர். இலவச மருத்துவப் பரிசோதனை ஒன்றில் தமக்கு இருக்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று மருத்துவர் சொன்ன பிறகு அன்றிலிருந்து இன்றுவரை விடாமல் ஓட்டங்களில் ஈடுபடுகிறார் அவர். கடந்த 18 ஆண்டுகளாக பலதரப்பட்ட நெடுந்தொலைவு ஓட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருவதாகக் குறிப்பிட்டார் சந்திரசேகரன்.
கொவிட் கட்டுப்பாடுகளால் கடந்த ஈராண்டுகளாக நேரடி ஓட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டாலும் மெய்நிகர் ஓட்டங்களிலும் தனிப்பட்ட அளவிலும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை அவர் பின்பற்றி வருகிறார்.
வாரநாட்களில் ஆறு கிலோ மீட்டர் (கி.மீ) தூரம் ஓடுவது, அடுக்குமாடிக் கட்டடங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, வீட்டிலிருந்தவாறு உடற்பயிற்சி சாதனத்தைப் பயன்படுத்துவது என்று துடிப்பாக உடற்பயிற்சி செய்வார் சந்திரசேகரன். 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ‘சன்டெளன்’ நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்துகொள்ளும் இவர், கடந்த ஆண்டு ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ மெய்நிகர் ஓட்டத்தில் 175 கி.மீ, 17.5 கி.மீ ஆகிய இரண்டு பிரிவுகளில் ஓடி, இலக்கை வெற்றிகரமாக அடைந்தார். 175 கி.மீ ஓட்டத்தில் முதியோரிடையே முதலாவதாக வந்தார்.
“வயதாகிவிட்டதே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம்தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரி. சோர்வு, சோம்பல், ஊக்கமின்மைக்கு இரையாகிவிடுவீர்கள். அனைத்து வியாதிகளும் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். இளமையுடன் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். அந்த இளமையை உணருங்கள். இதுதான் ஆரோக்கியத்தின் ரகசியம். இந்த எண்ணம் உங்களை உற்சாகமாக, சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்,” என்றார் திரு சந்திரசேகரன்.
செய்தி:
எஸ்.வெங்கடேஷ்வரன்