பெருந்தொற்றுச் சூழல் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைச் சமாளிப்பதில் பிள்ளைகளுக்கு உதவ, வலுவான குடும்ப பந்தங்களை வளர்ப்பது அவசியம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
பிள்ளைகள் பிரச்சினைகளைப் பற்றி பெற்றொருடன் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடிகிற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் மனநலம் குறித்த இணைய வழிக் கலந்துரையாடலில் அமைச்சர் நேற்று பேசினார். மாக்கான் ஆல்ரெடி எனும் அமைப்பு நடத்திய அந்தக் கலந்துரையாடலில் பெருந்தொற்றுச் சூழலில் பிள்ளை வளர்ப்பு குறித்த பிரச்சினைகள் பேசப்பட்டன.
பிள்ளைகளை ஓயாமல் மற்றவர்களுடன் ஒப்பிடுவதும் மற்ற உறவினர்களின் ஆதரவு அவர் களுக்கு இல்லாததும் பிள்ளை களைப் பாதிக்கும் என்று அவர் விளக்கினார்.
பிள்ளைகள் மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அவர்கள் இணையப் புழக்கத்தின்போது தங்களது நலனைப் பாதுகாக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் திரு சான் குறிப் பிட்டார்.
செயலி வழி நண்பர்களுக்கு இடையிலான உரையாடல்கள், தகவல்கள், படங்கள் ஆகியவற்றின் பரிமாற்றங்களால் பதற்றமடைந்து, தாங்கள் பின்தங்கிவிடுவோமோ என்று பிள்ளைகள் அச்சப்படாது இருக்க, அவர்களிடம் சாதனங்களை அளவுடன் பயன்படுத்துவது பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்றார் அவர்.
தகவல்கள் இணையத்தில் எளிதில் கிடைக்கக்கூடியவை என்றும் அவற்றை அலசி ஆராய்ந்து சரிவர கையாளத் தேவையான திறன் களைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்வது அவசியம் என்றும் கலந்துரையாடலில் அமைச்சர் கூறினார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட 'மாக்கான் ஆல்ரெடி' அமைப்பின் இணை நிறுவனர் லேரி லோ, எவ்வாறு வேலை, குடும்பம் இரண்டுக்கும் இடையே சமநிலை காண்பது என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆதரவுக் குழுக்களை மேலும் பலப்படுத்த விரும்புவதாக பதிலளித்தார். பெற்றோர் மற்றவர்களின் அனுபவங் களிலிருந்து பாடம் கற்க அது உதவும் என்றார் அவர்.
புதிய பெற்றோருக்கு ஏற்படும் மனஉளைச்சலையும் பதற்றத்தைச் சமாளிக்க உற்றார், உறவினர்களின் உதவியை நாடுவதன் அவசியத்தை யும் அவர் வலியறுத்தினார்.
"உதவி கேட்பதால் மற்றவர்கள் நம்மை தவறாக மதிப்பிட்டுவிடுவார்களோ என்ற பயத்தைக் கைவிட்டு நம் எல்லோருக்கும் கண்டிப்பாக உதவி தேவைப்படும் என்ற மனபோக்குள்ள சூழலை உருவாக்க வேண்டும்," என்றார் திரு சான்.
இணைய அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க, நண்பர்களிடம் கனிவன்புடன் நடந்துகொள்ள பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் என்றார் திரு சான்.
பெற்றோர் தங்களது எதிர்பார்ப்புகளை சரிசெய்து, தேர்வு முடிவுகளில் குறியாக இருக்காமல் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.