கொவிட்-19 நெருக்கடிநிலை
காரணமாக உலகெங்கும் சவால்மிக்க சூழல் ஏற்பட்டுள்ளது.
கிருமிப் பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு இடையே லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன், முழுவீச்சில் இயங்கி வருகிறது.
இதற்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) நிர்வாகக் குழு, ஊழியர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் மேற்கொண்ட மறுசீரமைப்பு முயற்சிகளே காரணமாகும்.
"மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தை சிங்கப்பூர் இந்தி மொழிச் சங்கம் 11 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்திருந்தது. 2019ஆம் ஆண்டில் அது அவ்விடத்தை
விட்டுச் சென்றதும் நினைவு மண்டபம் ஆள் அரவமற்றநிலையில் இருந்தது," என்று நினைவு மண்டபத்தின் அறங்காவலர் சபை உறுப்
பினரான 88 வயது திரு ஹைதர் சித்தவாலா கூறினார்.
நினைவு மண்டபம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எண் 3 ரேஸ் கோர்ஸ் லேனில் இருக்கும் இந்த இரண்டு மாடிக் கட்டடத்திற்கு 1950ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். சிங்கப்பூர்
இந்தியச் சமூகம் தாராளமாக வழங்கிய நிதியைப் பயன்படுத்தி இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
நினைவு மண்டபத்தை 1953ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கான அன்றைய பிரிட்டிஷ் தூதர் மால்கம் மெக்
டோனல்ட் அதிகாரபூர்வமாகத்
திறந்துவைத்தார்.
"நினைவு மண்டபத்தை இந்தியர் மரபுடைமை நிலையமாக மாற்றி அமைக்க நாங்கள் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. அனைத்து இனத்
தவர்களையும் ஈர்க்கும் இந்திய அமைப்பு ஒன்று நினைவு மண்டபத்தை ஏற்று நடத்தினால் நன்றாக இருக்கும் எனக் கருதினோம்.
"அவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தியின் பெயர் நிலைத்திருக்கும். மகாத்மா காந்திக்கு சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தனி மரியாதை
உள்ளது. சிஃபாஸின் கலைகள், இசை, நடனம் ஆகியவை இந்திமொழியில் மட்டுமல்ல, அனைத்
துலக நிலையிலும் போற்றப் படுகின்றன.
"தனது கலைச் சேவையை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருந்த சிஃபாஸ் நிர்வாகத்
தினரிடம் இந்தப் பரிந்துரையை முன்வைத்தபோது அதற்கு அவர்கள் உடனடியாக இணக்கம் தெரிவித்தார்கள்.
"கலைகள், இசை, நடன வகுப்பு களுடன் நினைவு மண்டபம் தற்போது உயிர்த்தெழுந்துள்ளது," என்றார் திரு சித்தவாலா.
"நினைவு மண்டபத்தின் உட்
புறங்களை முழுமையாகப் புதுப்பிக்கும் பொறுப்பை சிஃபாஸ் ஏற்றுக்கொண்டது.
"நினைவு மண்டபம் மிகவும் பழமையான கட்டடம். எனவே
கட்டட முகப்பின் பாரம்பரியத் தோற்றத்தைப் பாதுகாப்பதுடன், நவீன அம்சங்கள், இந்திய பாரம்பரிய கலைகள், மகாத்மா காந்தி தொடர்பான நினைவுப்பொருள்கள், உயர் ரக வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் கவனமாகச் செயல்பட்டோம்.
"நினைவு மண்டபத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைகளை எடுத்துரைக்கும் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதில் அறங்
காவலர்கள் தெளிவாக இருந்தனர். கலைப்பொருள்கள், நூல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூலகம் நினைவு மண்டபத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் சமூக மேம்பாட்டுக்கு நினைவு மண்டபம் பயன்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இசை, நடனம், கலைகள் ஆகியவற்றை சமூகத்தினரிடம் கொண்டுபோய் சேர்ப்பதே சிஃபாஸின் இலக்கு. அறங்காவலர்களின் குறிக்
கோளைப் போன்றே எங்களது குறிக்கோளும் உள்ளது," என்று சிஃபாஸின் தலைவர் திரு கே.வி. ராவ் தெரிவித்தார்.
நினைவு மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க ஏதுவாக நவீன அரங்கம் ஒன்று அமைக்கப்
பட்டுள்ளது.
நீர் புக முடியாத தரை, புதுப்பிக்கப்பட்ட மேற்கூரை, உயர்தர ஒளியூட்டு வசதிகள், நவீன ஒலிபெருக்கிச் சாதனங்கள் ஆகியவை நினைவு மண்டபத்தை மேல் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன. நினைவு மண்டபத்தின் நூலகம் உள்ளூர் ஓவியரான திருவாட்டி அஞ்சலி வெங்கட்டின் கைவண்ணத்தில் எழிலுற காட்சியளிக்கிறது.
மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி களைக் கொண்டு பார்ப்பவர்
மனதைக் கவரும் மகாத்மா
காந்தியின் உருவப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
மகாத்மா காந்தி தொடர்பான விலைமதிப்பற்ற, பழைய
நினைவுப்பொருள்கள் நூலகத்தை அலங்கரிக்கின்றன. இந்தியத் தூதரகம் நன்கொடை வழங்கிய அரிய நூல்களும் புகைப்படங்களும் நூலகத்தில் இடம்பெறுகின்றன.
இணையம் வழி கற்றலை எளிதாக்கும் நோக்கில் 12 சதுர
மீட்டரிலிருந்து 42 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட ஆறு அறைகளில் கணினிகள் வசதி
களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட, தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கலைப்பொருள்கள், புகைப்
படங்கள், செய்தித்தாள் அறிக்கைகள் ஆகியவை கட்டடத்தின் உட்புறமெங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்கள், சிஃபாஸ் ஊழியர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டவை.
1949ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை சிஃபாஸின் வரலாற்றைக் குறிக்கும் சுவர் ஓவியமும் புதுப்பிக்கப்பட்ட நினைவு மண்டபத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பாலர் பள்ளி மாணவர்களுக்கான விகாசா அறை, படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ள பரத
நாட்டிய, கதக் நடன முத்திரை
களைக் காட்டும் மிதக்கும் சிற்பங்கள், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசை, ஓவியக்கலைஞர் எஸ். ராஜம்மின் கலைப் படைப்புகள் ஆகியவை நினைவு மண்டபத்துக்கு அழகு சேர்க்கின்றன. திட்டமிடுதல், வடிவமைப்பு ஆகியவை அனைத்தும் சிஃபாஸின் ஊழியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரால் செய்யப்பட்டதாக சிஃபாஸின் துணைத் தலைவர் திரு ஹரி
சுப்பிரமணியம் கூறினார்.
"எங்கள் மாணவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தேவையான வசதிகளையும் அழகிய சூழலையும் ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியம். நினைவு மண்டபத்தைப் புதுப்பிக்க சிஃபாஸ் அதன் வளங்களை மட்டுமே பயன்படுத்தியது," என்றார் அவர்.
புதுப்பிக்கப்பட்ட நினைவு மண்டபத்துக்கு Sifas Annexe@MGM எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அதன் அதிகாரபூர்வத் திறப்பு விழாவை இவ்வாண்டு நடத்த சிஃபாஸ் திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து புதிய இடத்தை சிஃபாஸ் பயன்
படுத்தி வருகிறது.
சிஃபாஸ் உறுப்பினர்களிடையே நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், நடன அரங்கேற்றங்கள் ஆகியவற்றுக்குப் புதுப்பிக்கப்பட்ட நினைவு மண்டபத்தைப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பின் செயலாளர் திரு பி. சோமசேகரன் தெரிவித்தார். சுவாகதம் எனும் கலை
நிகழ்ச்சிகளையும் அங்கு நடத்தி இருப்பதாக அவர் கூறினார்.
பரதநாட்டியம், இந்துஸ்தானி வாய்ப்பாட்டு, ஹார்மோனியம், பஜனைகள், கஸல், கர்நாடக வாய்ப்பாட்டு, விகாசா எனப்படும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாலர்
பருவத்தினருக்கான திட்டம் ஆகிய வகுப்புகளைப் புதுப்பிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் சிஃபாஸ் தற்போது நடத்தி வருகிறது.
மூத்த குடிமக்கள், வசதி குறைந்த இந்தியர்கள் ஆகியோரின் மனநலம், உணர்வுகளை மேம்
படுத்த உதவும் வகையில் அவர்
களுக்கென சிறப்பு நடவடிக்கைகளை நடத்த சிஃபாஸ் திட்ட
மிட்டிருப்பதாக திரு சோமசேகரன் தெரிவித்தார். நான்கு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்காக விகாசா திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 2 மணியிலிருந்து 3.30 மணி வரை நடத்தப்படுகிறது.
அதில் கலந்துகொள்ளும் சிறாருக்கு இசை, நடனம், கதை சொல்லுதல், ஓவியக்கலை ஆகியவை மூலம் இந்தியக் கலைகள் பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாக சிஃபாஸ் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டது.
"என் இரு சிறு பிள்ளைகளுக்கு அடிப்படை நடனம் கற்பிக்கப்படுகிறது. அவர்களுக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் நமது பாரம்
பரியத்தைக் கற்றுக்கொள்வது மட்டு மல்லாது, நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்கவும் இது மிகச் சிறந்த வழி," என்று திருவாட்டி ஸ்டெஃபனி ராய் விக்னேஷ் தெரிவித்தார்.
"நூலகமும் நினைவுப்பொருள்கள் காட்சியகமும் மகாத்மா
காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவரை கௌரவிக்கவும் அமைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் பிறந்தநாளின்போது சிறப்பு நிகழ்வுகளுக்கு சிஃபாஸ் ஏற்பாடு செய்யும். தகுதி பெறும் சிஃபாஸ் மாணவர்களுக்கு மகாத்மா காந்தியின் பெயரில்
உபகாரச்சம்பளம் வழங்கப்படும்.
"புதுப்பிக்கப்பட்ட கட்டடமும் அதில் உள்ள வசதிகள் அனைத்தும் கலைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்படுகிறது. சிஃபாஸின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அது பயன்படுத்தப்படும்.
அதே சமயத்தில் கட்டடத்தில் உள்ள வசதிகளை பொதுமக்கள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்," என்று சிஃபாஸின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி மேனகா கோபாலன் கூறினார். செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிஃபாஸ் நடத்தும் வகுப்புகளிலும் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.
செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நினைவு மண்டபத்தில் உள்ள நூலகம் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.