திருமணத்துக்குப் பின்னர் மனைவி திருமதி நித்தியா சமைத்த தக்காளிச்சோற்றை உண்ட பின்னரே அவருக்குச் சமைக்கத் தெரியாது என்பதை அறிந்தார் திரு ராம்
பிரசாத். இருப்பினும், முகம் சுளிக்காமல் மனைவிக்கு ஆதரவாக அவர் இருந்தார். நித்தியாவும் மாமியாரிடமிருந்து சமையல் கற்றுக்கொண்டார்.
15 ஆண்டுகால மணவாழ்க்கையில் இன்றும் ஒருவர் பற்றி ஒருவர் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறினர் ராம்பிரசாத்-நித்தியா தம்பதியினர்.
"அவருக்குத் தொடக்கத்தில் சமைக்கத் தெரியாவிட்டாலும் விரைவில் அதனைக் கற்றுக்கொண்டார். அதுபோல எங்கும் மனஉறுதியுடன் செயல்படும் அவரது சுபாவம் என்னைக் கவர்ந்தது," என்றார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரி யும் திரு ராம்பிரசாத் மணி, 40.
கல்லூரிப் பருவத்தில் அவர்
களது காதல் மலர்ந்தது. இருவரும் சேர்ந்து எதிர்கொண்ட முதல் சவால், பெற்றோரின் சம்மதத்தை நாடுவதே. திருமதி நித்தியாவின் குடும்பத்தார் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். அச்சமயம் பணி நிமித்தமாக வேறு மாநிலத்திலிருந்த திரு ராம்பிரசாத்தைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. நவீன தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலும் ஒருவரையொருவர் எப்போதும் மனதில் வைத்திருந்ததே அவர் களின் உறவை வலுப்படுத்தியதாக திருமதி நித்தியா நினைவுகூர்ந்தார்.
"தினமும் காலையில் அவர் இஞ்சி தேநீர் போடுவார். எந்த மனச்சங்கடம் எங்களுக்குள் ஏற்பட்டிருந்தாலும் அடுத்த நாள் காலை எப்போதும் அந்த இஞ்சி தேநீர் எனக்காகக் காத்திருக்கும். அது என்னை நெகிழ வைக்கத் தவறியதில்லை," என்றார் இல்லத்தரசி திருமதி நித்தியா சிவாஜி, 40.
சமூகத்துக்குப் பணியாற்றும் இடத்துக்கு தங்களது மகள் உயரவேண்டும் என்பது இந்தத் தம்பதியரின் ஆசை. நரை முடி வரினும் தாங்கள் இருவரும் கைகோத்து நடக்கும் மனக்காட்சி நனவாவதையே வாழ்நாள் விருப்பமாகக் கொண்டுள்ளார் திருமதி நித்தியா.