மகன் பிறந்தபோது ஆண் குழந்தை களுக்கான தமிழ்ப் பாரம்பரிய ஆடைகளைத் தேடிய ச.சந்தனாவுக்கு திருப்திகரமாக எதுவும் அமையவில்லை.
எங்கு தேடினாலும் பெரும்பாலும் வளர்ந்த குழந்தைகளுக்கான ஆடைகளாக இருக்கின்றன.
ஓரிரு கடைகளில் மட்டுமே சிறு குழந்தைகளுக்கான ஆடைகள் விற்கப்பட்டன.
அதிலும் பெண் குழந்தைகளுக்கே அதிக ஆடைகள் காணப்பட்டன. துணியின் தரமும் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.
இதுவே, 'ஹே பப்லூ' எனும் துணிக்கடை உருவானதற்கு மூல காரணமாகும்.
ஆஸ்திரேலியா வரை சென்று கல்வித்துறையில் மேற்படிப்புப் படித்து வந்த 33 வயது சந்தனா, முழு நேர துணை வகுப்பு ஆசிரிய ராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக கர்ப்பமாக இருந்த அவர் தன் வீட்டில் தொடர்ந்து பாடம் நடத்துவதற்கும் தயங்கினார்.
வேறுவழியில்லாமல் தனது பணியை விட்டுவிட்டு சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பிறகே ஆண் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஆடைகளுக்கான தேடலை அவர் தொடங்கினார்.
"நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நான் வர்த்தகம் தொடர்பான துறையில் கல்வி பயின்றேன். குழந்தையின் 11வது நாள், 30வது நாள் போன்ற சடங்குகளுக்காக எனக்குப் பிடித்தாற்போல் என் மகனுக்கு இந்திய பாரம்பரிய உடைகள் அமையாததால் நாமே சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் விற்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
"அவ்வாறு தொடங்கியதுதான் 'ஹே பப்லூ'. என் மகன் மூலம் கிடைத்த உத்வேகத்தால் முழு முயற்சியுடன் வியாபாரத்தில் இறங்கினேன்," என்று சந்தனா புன் முறுவலுடன் கூறினார்.
கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வியாபாரம் தொடங்குவது சந்தனாவுக்குச் சவால்மிக்கதாகவே அமைந்தது.
தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து சில ஆடைகளை இறக்கு மதி செய்தபோது தன் நண்பர்களும் குடும்பத்தினரும் ஆதரவு அளித்தனர்.
ஆனால், பெரிய அளவில் வியாபாரம் செய்வதற்கு இந்தியாவில் தெரிந்தவர்கள் இல்லாததால் சில உற்பத்தியாளர்களிடம் ஏமாற்றமும் அடைந்ததாக சந்தனா தெரிவித்தார்.
இருந்தாலும், விடாமுயற்சியுடன் பகல் முழுவதும் மகனைப் பார்த்துக்கொண்டு இரவு முழுவதும் இணையத்தின் மூலம் நல்ல உற்பத்தியாளர்களைக் கண்டறிந்து தனது வியாபாரத்துக்கு அடித் தளத்தை இவர் அமைத்துக்கொண்டார்.
"என் கணவர் எனக்குப் பக்க பலமாக இருந்தார். கொள்ளைநோய் பரவல் காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றிய வேளைகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உதவியதோடு வியாபாரத்திற்காக இணையத்தளம் உருவாக்குதல் தொழில்நுட்பச் சவால்களைச் சமாளித்தல் போன்றவற்றில் உதவி செய்தார்.
"அதனால் குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவும் வியாபாரத்தை பெருக்கவும் முடிந்தது. வியாபாரம் சூடு பிடித்தபோது என் அம்மாவும் மகனைப் பார்த்துக்கொள்ள உறு துணையாக இருந்தார்," என்றார் சந்தனா.
ஏற்கெனவே வடிவமைக்கப் பட்ட ஆடைகளை விற்பனை செய்வதோடு வாடிக்கையாளர் களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்ததால் வியாபாரம் அதிகரித்ததாக அவர் கூறினார்.
"தொடக்கத்தில் அடிக்கடி வாடிக்கையாளர்களின் குறுந்தகவல்களுக்கு விடையளிப்பதிலேயே பெருமளவு நேரத்தைச் செலவழித்தேன்.
இதனால், என் மகனுடன் செலவழிக்கும் நேரம் குறைந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கினேன்.
"இப்போதெல்லாம், வார நாள்களில் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு வார இறுதி நாள்களில் பிள்ளைகளுடன் நேரத்தை முழுமையாக செலவழிக்கிறேன்," என்று கூறிய சந்தனா அண்மையில் தனக்கு 2வது குழந்தை பிறந்த விவரத்தையும் பகிர்ந்துகொண்டார்.