'கென்வின் கணக்கியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள்' எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கிய கென்வின் சிவகாமி, திருமணம், குழந்தைப்பேறு என குடும்பத்தோடு தனது தொழிலிலும் முன்னேறினார்.
"குழந்தை பெற்றதால் எனது வியாபாரம் பாதிப்படையவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், என் குழந்தைகளுக்காகவே நான் இன்னும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. என் குழந்தைகளுக்கு நான் ஒரு முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்று விரும்பினேன்.
"அதனால் கருவுற்றிருக்கும் காலத்திலேயே புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி னேன். என் மூன்றாவது மகன் கருவுற்றிருந்தபோது 'லுவிஸ் ஃப்ளோரல்ஸ்' எனும் நவீன மெழுகுவர்த்திகளை விற்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன்," என்று 34 வயது கென்வின் தெரிவித்தார்.
பிள்ளைகளிடமும் தொழிலிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த தனது குடும்பத்தினர் பல வகைகளில் உதவியதாகவும் கென்வின் கூறினார். 'லுவிஸ் ஃப்ளோரல்ஸ்' நிறுவனத்தை குடும்ப உறுப்பினர்கள் நடத்துகின்றனர் என்றும் பெற்றோரும் சகோதரர்களும் புத்தாக்கச் சிந்தனையுடன் தொழிலுக்கு மெருகூட்டுகின்றனர் என்றும் இவர் கூறுகிறார். அதோடு தனது கணவர் தொழில்நுட்பம் சார்ந்த சவால் களைச் சமாளிப்பதற்கு உதவினார் என்றார் இவர். அதாவது குடும்பத்தினர் அனைவரும் ஒருவரையொருவர் தாங்கும் தூண்கள் என்று கென்வின் வர்ணிக்கிறார்.
"தொழிலைக் கவனித்துக்கொண்டே என் பிள்ளைகளுடன் என்னால் போதுமான நேரத்தைச் செலவிட முடிகிறது. தொழில்நுட்பத் தின் உதவியுடன் பல பணிகளை எளிமையாக்குவதே எனது 'கென்வின் கணக்கியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள்' நிறுவனத்தின் சேவையாகும். இதனால் மற்றவர்களும் அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்க முடியும்," என்று கென்வின் சொன்னார்.
பெண்ணுரிமையை நம்பும் கென்வின் பெண்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
தாயாகிய பின்னர் ஏற்படும் சவால்களைக் கண்டு துவண்டுவிடாமல் வியாபாரங்களையும் விட்டுவிடாமல் மற்றவர்களின் உதவியை நாடினால் எல்லாமே சாத்திய மாகும் என்கிறார்.
வீட்டைப் பார்த்துக்கொள்வதும் பிள்ளைகளை வளர்ப்பதும் ஒரு தாயின் பொறுப்பு மட்டுமல்ல. குடும்பத்திலுள்ள அனைவரும் இதற்குப் பங்காற்ற வேண்டும் என்று கென்வின் தெரிவித்தார்.