குழு நிர்வாகி பேப் கார்டியோலா தலைமையில், மான்செஸ்டர் சிட்டி குழு மூன்றாம் முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் மகுடத்தை வென்றுள்ளது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கும் அதன் பரமவைரி மான்செஸ்டர் யுனைடெட் குழு 2-1 என்ற கோல் கணக்கில் இன்று அதிகாலை (மே 12ஆம் தேதி) லெஸ்டர் சிட்டியிடம் தோல்வி காண, லீக் மகுடம் மான்செஸ்டர் சிட்டிக்கு உறுதியானது.
10 புள்ளிகள் வித்தியாசத்துடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் இன்னும் லீக் பருவத்தில் மூன்று ஆட்டங்களை விளையாடுவதாக உள்ளது.
"இப்பருவத்தில் சந்தித்த சவால்களையும் கட்டுப்பாடுகளையும் கடந்துவந்து ஆட்டங்களில் நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வெற்றியாளர் மகுடத்தை வென்ற விதம் அற்புதமானது, இந்த வெற்றியை எந்நாளும் நினைவில் வைத்திருப்போம்," என்று கூறினார் மான்செஸ்டர் சிட்டி குழு நிர்வாகி கார்டியோலா.
மூன்று முறை லீக் வெற்றியாளர் மகுடத்தை இங்கிலாந்து மட்டும் அல்லாமல் கார்டியோலா இதற்கு முன் நிர்வகித்த ஸ்பானிய, ஜெர்மானிய லீக் குழுக்களிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டத்தில் விளையாட்டாளர்கள் மூழ்கிக்கிடக்க, மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி வேட்டை தொடர்ந்து நீடிக்கக்கூடும்.
அது வரும் மே 29ஆம் தேதி (ஐரோப்பிய நேரம்), சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் செல்சி அணியை வென்று 'ஐரோப்பாவின் காற்பந்து ஜாம்பவான்' என்ற அங்கீகாரத்தையும் பெறக்கூடும்.